பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

173

அதற்குப் பின் அந்த மகஜரில் மூன்றாவது கையெழுத்து எதுவும் வாங்கவே முடியவில்லை. தன்னிடம் வந்து குறை கூறிய ஆசிரியைகளை மீண்டும் பூமி சந்திக்க விரும்பினான். ஆனால் அவர்கள் அவனைச் சந்திப்பதைத் தவிர்த்தார்கள்.

பள்ளிக்கு வந்து சந்திப்பதற்கு அவர்கள் தயாராயில்லை என்றும் பூமியைத் தேடி வந்து சந்திப்பதற்கு அவர்கள் தயாராயில்லை என்றும் சித்ரா நிலைமையை விளக்கினாள். ஐலண்டு மைதானத்தில் நடக்கும் ஒரு எக்ஸ்பிஷனுக்காக மாணவர்களை அழைத்துக்கொண்டு அன்று பிற்பகலில் ஆசிரியைகள் போக இருப்பதாகச் சித்ரா கூறினாள்.

முன் தகவல் எதுவும் தெரிவிக்காமலே திடீரென்று அவர்களை அங்கே வந்து தான் சந்தித்துக் கேட்கப் போவதாகப் பூமி கூறினான்.

“எங்கே வந்து கேட்டாலும் பயனில்லை, நீங்கள் சந்தித்த பழைய கல்வி அதிகாரி உங்களிடம் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. அவர் வாய்க்குச் சர்க்கரைதான் போட வேண்டும். இவர்கள் பயந்து சாகிறார்கள். இந்த தேசத்தில் மட்டும் அதிர்ஷ்டவசமாகப் படிப்பும் கோழைத்தனமும் இரட்டைப் பிறவிகளாக இருக்கின்றன."என்றாள் சித்ரா.

பூமி நம்பிக்கை இழக்கவில்லை. சித்ரா சொல்லியதிலுள்ள உண்மை அவனுக்கு புரிந்தாலும் இன்னொரு தடவை அந்த ஆசிரியைகளிடம் பேசி முயன்று பார்க்கலாம் என்று இருந்தான் அவன். பயமும் கோழைத்தனமும் இந்நாட்டுக் கல்வியின் உடன் பிறந்தே கொல்லும் வியாதிகளாக இருந்து வருவது உண்மைதான். அறிவுள்ளவர்களின் பயமும் சரி, அறிவற்றவர்களின் துணிவும் சரி, இரண்டுமே இந்நாட்டில் தேவைக்கதிகமாக இருந்தன. அவர்கள் அஞ்ச வேண்டாததற்கெல்லாம் அஞ்சிச் செத்தார்கள். இவர்கள் அஞ்ச வேண்டியதற்குக்கூட அஞ்சாத அளவு முரடர்களாயிருந்தார்கள். விவரந் தெரிந்தது. கோழைகளுக்கும், விவரம் தெரியாத முரடர்-