பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

259

அது என்ன அப்பிடி எங்களுக்குக் கூடத் தெரியாத காரியம்?” என்று அவர்களில் ஒருவன் பூமியை மடக்கினான். பூமி அவனை மட்டும் தனியே அழைத்து அவன் காதருகே சொன்னான்.

“நேற்று புதைத்த பிணத்தருகே ஒரு தடயம் சிக்கிப் போச்சு, கொஞ்ச நேரத்திலே இங்கே போலீஸ் வந்தாலும் வரலாம். அதுக்குள்ளே தடயத்தை எடுத்துக்கிட்டு வந்துடணும்னு எங்களை மன்னாரு அனுப்பிச்சாரு. நீ வீணா நேரமாக்கினியோ எல்லாருமே மாட்டிக்குவோம். நாங்களும் உடனே போயாகணும்! நீங்களும் பதுங்கற இடத்திலே போய்ப் பதுங்கிக்கணும். ஒழுங்கா வழிவிடு.”

இந்தத் தந்திரம் உடனே பலித்தது. அவர்கள் பூமியை மன்னாருவினால் அனுப்பப்பட்ட ஆளென்று நம்பிவிட்டார்கள். மிகவும் வேண்டிய ஆளாயிருந்தாலொழிய இவ்வளவு பெரிய இரகசியத்தை மன்னாரு அவனிடம் சொல்லியிருக்க முடியாதென்றும் அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். அதோடு போகாமல் கட்டுமரம் வரை உடன் வந்து “இவர்களைச் சீக்கிரமாகக் கரையில் கொண்டு போய்ச் சேர்க்கணும். பெரிய முதலாளி அனுப்பி வச்சிருக்காங்க... ஜல்தி” என்று அவர்களுக்கு உத்தரவும் போட்டுவிட்டுப் போனான் ஒரு குண்டன். கட்டு மரத்தில் ஏறி உட்கார்ந்த பின்பே பூமிக்கும் நண்பர் களுக்கும் நிம்மதியாக மூச்சு வந்தது.

கரையில் இறங்கியதும் கட்டுமரக்காரர்களுக்குப் பணம் கொடுக்கப் பூமி மணிபர்ஸைத் திறந்ததும், “வேண்டாங்க...காசு! வாங்கினதாகத் தெரிஞ்சாப் பெரிய முதலாளி தோலை உரிச்சிடுவாரு” என்று பயந்து ஒதுங்கினார்கள் அவர்கள்.

சிறிது காலமாக அந்தத் தீவே கடத்தல்காரர்களின் முழு ஆதிக்கத்துக்கு வந்துவிட்டது என்று பெரியவர் காளத்திநாதன் கூறியதன் அர்த்தம் பூமிக்கு இப்போது புரிந்தது. கரையில் இறங்கியதும் வேறு சில தகவல்களை விசாரித்துத் தெரிந்துக் கொண்டு பூமியும் நண்பர்களும் ஆட்டோவில்