பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

சாயங்கால மேகங்கள்

"அப்படிப்பட்ட ஏனோதானோ மனப்பான்மைதான் அராஜகத்துக்கு இடப்படும் உரம் ஆகிறது.”

திருட்டு என்பதும் வன்முறை என்பதும் தேசியத் தொழில்களில் சில வகைகளாகவே ஆகிவிட்டன.”

“பஸ்ஸில் பார்த்த அந்த அப்பாவி மனிதரைப் போலச் சிலர் அவற்றைத் தேசியத் தொழில்களாக மதித்து அவற்றுக்குத் தலைவணங்கிப் பணிந்து நடக்கவும் ஆரம்பித்து விடுகிறார்கள்.

“முதல் மனிதனைத் தொடர்ந்து பின்பு தற்செயலாகப் பலர் செய்யும் தவறுகள் எல்லாமே இங்கே ஏற்றுக்கொள்ளப்பட்ட, வாடிக்கைகள் ஆகிவிட்டன. லஞ்சம் முதல் பதவிவெறி வரை அனைத்திற்கும் இது பொருந்தும். தீயதை அது நுழைய முயலும் முதல் எல்லையிலேயே எதிர்த்து நிற்கும் மூர்த்தண்யம் மறைந்து, “சரி தொலையட்டும்” என்று உள்ளே விட்டு விடுகிற மனப்பான்மை எங்கும் எதிலும் வந்துவிட்டது. இன்றைய சீரழிவுகள் எல்லாவற்றுக்குமே இதுதான் காரணம்”

அந்த வார இறுதியில் அவர்கள் கல்வி இலாகாவுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் அனுப்பிவைத்த புகார்க் கடிதத்தின் விளைவு தெரிந்தது. அரசாங்க அலுவலகங்களில் சித்ராவும், தேவகியும் பணி புரிந்து வந்த பள்ளியின் நிர்வாகிக்கு உளவு சொல்லக்கூடியவர்கள் இருந்தார்கள். புகார் வந்திருப்பதையும், அதில் சித்ரா, தேவகி இருவரும் கையெழுத்து இட்டிருப்பதையும் பள்ளி நிர்வாகி தெரிந்து கொண்டார்.

உடனே, அவருக்கு ஆத்திரம் மூண்டது. அவர்கள் இருவரையும் பழிவாங்கினார். ‘நடத்தைக் கோளாறு’ -- ‘சீரியஸ் மிஸ்காண்டெக்ட்’ என்று சித்ரா தேவகி இருவர் .மேலும் குற்றம் சாட்டி இருவரையும் வேலையிலிருந்து நீக்கினார் பள்ளியின் நிர்வாகி. எதிர்பார்த்ததுதான். ஆனால் ‘நடத்தைக் கோளாறு’ என்று குற்றம் சாட்டியதுதான் எரிச்சலூட்டியது.