பக்கம்:அணியும் மணியும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அன்பைக் குறைத்துத் துறவைப் பெருக்கி அருளறத்தை வளர்க்கும் நிலைமையைப் படிப்படியே காட்டிச் செல்கின்றார்.

கண்கள் சிந்திய நீர் அவள் தொடுத்துக்கொண்டிருந்த மாலையைத் தூயதற்றதாக ஆக்குகிறது. மது மலர்க் குழலினாளைப் புதுமலர் கொய்துவருமாறு மாதவி சுதமதியோடு அனுப்ப, அவளும் பூமலர்ச் சோலை நோக்கிப் போகிறாள். நாட்டு மன்னனின் மகனான அரசிளங்குமரன் அவளை அடையும் ஆவலால் உந்தப்பட்டுச் சோலைநோக்கி அதேவேளை செல்கிறான். அவன் தேரேறி வந்ததால் எழுந்த தேரொலி மணி மேகலையின் செவியில் கேட்கிறது. அப்பொழுதே, வந்தவன் யாவன் என்பதை மணிமேகலை உணர்ந்து, உதயகுமாரன் தன் மேல் கொண்டுள்ள உள்ளத்தை மாதவிக்கு அவள் தோழியாகிய வயந்தமாலை முன்னரே கிளந்துளள் ஆதலின், உதயகுமரனின் தேரொலி அஃது என்பதைச் சுதமதிக்கு உணர்த்துகிறாள்.

ஆங்கவன் தேரொலி போலும் ஆயிழை
ஈங்கென் செவிமுதல் இசைத்ததுஎன் செய்கேன்

- பளிக். 83-84

என அமுதுறு தீஞ்சொல்லால் அவள் உணர்த்துகிறாள். உடனே, சுதமதி பளிக்கறை மண்டபத்துள் அப்பாவையைப் புகும்படி அறிவுறுத்தி அவளை அங்கே இருக்குமாறு செய்கிறாள். அரசிளங்குமரன் அவள் இளமையையும் அழகையும் பாராட்டி,

விளையா மழலை விளைந்து மெல்லியல்
முளையெயிறு அரும்பி முத்துநிரைத் தனகொல்
செங்கயல் நெடுங்கண் செவிமருங் கோடி
வெங்கணை நெடுவேள் வியப்புரைக் குங்கொல்

- பளிக். 99-102