பக்கம்:அணியும் மணியும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

என்று மணிமேகலையின் நலத்தைப் பாராட்டிய வண்ணம் மணிமேகலை மாதவர் உறைவிடம் நீங்கித் தானே தனியளாக இங்கு வந்தது எதற்கு என்று, இளமையின் காரணமாக வளமான சொற்களால் அவள் அழகை அளக்கத் தொடங்குகிறான்.

மணிமேகலை ஊழ்தரு தவத்தள் எனவும், காமனை வெல்லும் வாய்மையள் எனவும் சுதமதி எடுத்துக் கூறிய போதினும், அவன் அவளிடம் கொண்ட காதலை விடாதவனாகி, ‘வஞ்சி நுண்ணிடை மணிமேகலைதனைச் சித்திரா பதியாற் சேர்தலும் கூடும்’ என்று, ஆங்கு அப் பொழிலைத் தவிர்ந்து நீங்குகிறான்.

அதுவரையிலும் அவன் கூறிய சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்த மணிமேகலையின் மனநிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர். துறவை நாடும் அவள் உள்ளத்திற்கும் உறவை அறுப்பது எவ்வளவு அரிது என்பதை அவள் வாய்ச் சொற்கள் உணர்த்துகின்றன.

கற்புத் தானிலள் நற்றவ உணர்விலள்
வருணக் காப்பிலள் பொருள்விலையாட்டியென்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போன்தென் நெஞ்சம்

- காதை 5, 86-89

என்று கூறுகிறாள். அவ்வுள்ளத்துணர்வு அவளுக்கே புதுமையாக இருக்கிறது:

இதுவோ அன்னாய் காமத் தியற்கை

என்று மேலும் தொடர்ந்து கேட்கிறாள்.

அரசிளங்குமரன்பால் அவள் நெஞ்சம் நெகிழ்கிறது; அதனால்தான் அவள்: