பக்கம்:அணியும் மணியும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

பூங்குன்றனார் என்ற புலவர் வானிற் பறக்கும் பறவையைப் போல் உள்ளம் உயர்ந்து உலகமெல்லாம் ஒன்று எனவும், மனித இனம் ஒன்று எனவும் காணும் காட்சிகள் நம் உள்ளத்தை உயர்த்துகின்றன. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கூறும்பொழுது உலகத்தில் உள்ள நாடுகளை ஒற்றுமைக் கண்ணோட்டத்தோடு காணும் காட்சியும், மக்களினம் எல்லாம் உறவினர் என்று கொள்ளும் கொள்கையும் பெறப்படுகின்றன. இன்றைய உலகத்துக்குத் தமிழுலகம் அறிவிக்கும் நற்செய்தி இதைவிட வேறு ஒன்றும் இருக்க முடியாது. உலகத்தில் போரும் பூசலும் நீங்க வேண்டுமென்றால் இந்தக் கொள்கை யாண்டும் பரவவேண்டும்.

“எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தினர்; கேடும் ஆக்கமும் தாமே வரினல்லது பிறர்தர வாரா. நோதலும் அது தீர்தலும் அவற்றை யொப்பத் தாமே வருவன. சாதலும் புதிதன்று; வாழ்தலை இனிதென உவந்ததுமிலம்: வெறுப்பு வந்துவிட்டது இன்னாது என்று இகழ்ந்ததும் இலம். வளமான பெரிய ஆற்றில் நீர்வழிப்படும் மிதவைபோல அரிய உயிர் ஊழின் வழியே படும் என்பது நன்மைத்திறம் அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தனம்; ஆகலின் மாட்சியினையுடைய பெரியோரை வியத்தலும் இலம்; சிறியோரைப் பழித்தல் அதனினும் இலம்” என்று கூறுகின்றார்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவதன்றே; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; மின்னொடு
வானந் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படு உம் புணைபோல் ஆருயிர்