பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலர்க்குப் பாராட்டு!

கி.மு, கி.பி. என்று காலத்தைக் கணக்கிடுவார்கள். இந்திய மண்ணைப் பொறுத்தவரை சுதந்திரத்துக்கு முன் என்றும் பின்னென்றும் நம்மை நாம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். அந்த வகையில் இந்நூலாசிரியர் சுதந்திரத்துக்கு முற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஒரு நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் அவரும் ஒன்றாகவே கலையுலகில் காலடி எடுத்துவைத்தவர்கள். நான் ஒரு நாடகம் எழுதினேன். அதன் பெயர் : ”சூறாவளி” குடந்தையில் அரங்கேறிற்று அதன் பாடலாசிரியர் அவர்.

அவர் எழுத்திலே தமிழ் மரபிருக்கும், தமிழின் தரமிருக்கும், தமிழ்ப் பண்பாட்டின் பழைய மிடுக்கிருக்கும், புதிய பார்வையுமிருக்கும். அவர் ஒரு கவிஞர்; அல்ல, அதற்கும் மேலானவர். ஒரு நல்ல நண்பர்.

விலைக்கு எழுதும் வியாபார நோக்கு அவருக்கு இருந்ததில்லை. கலைக்கு எழுதும் கற்பனை போக்கு மிக்கவர். அவர்தான் மருதகாசி அவரை நான் மரியாதைகாசி என்பேன். அவர் தம் காரோட்டியைக் கூட அண்ணே வாங்க போங்க என்றே அழைப்பார்.

விவசாயி வியாபாரி ஆக முடியாது வியாபாரி விவசாயி ஆகக்கூடாது என்று ஆன்றோர் சொல்லுவர். பாரம்பரியமான இந்த விவசாயி, வியாபாரி ஆனார். அதுவும் திரைப்படத் தயாரிப்பில், அதுதான் தாளாத தளர்ச்சியையும் முதிர்ச்சியையும் அவருக்குத் தந்துவிட்டது.

அத்தடைகளையும் மீறி தமிழும் ஆர்வமும் அவரைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான படங்களுக்கு ஆயிரக்கணக்கில் பாடல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் ஒரு சில, தமிழ்க் கரங்களிலே தவழ ஒரு புத்தக வடிவெடுத்து வருகின்றன. தமிழ்த் திரைப்பட சரித்திரப் பாட்டையில் இது ஒரு சுவடு. பாடல்களுக்குப் பின்