பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

"கண்வழி புகுத்து கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மெளனம்?
வேறெதிலே உந்தன் கவனம்?"
"மாசிலா உண்மைக் காதலே!
மாறுமோ செல்வம் வந்த போதிலே!"
"தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? - காதல்
கண்கள் உறங்கிடுமா?"
"இதுதான் உலகமடா! - மனிதா
இதுதான் உலகமடா! - பொருள்
இருந்தால் வந்து கூடும்! - அதை
இழந்தால் விலகி ஓடும்!"
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே!
வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே"

என்று இப்படி எண்ணற்ற பாடல்களை என் இதயத்தேரில் ஏற்றி, ஊர்வலம் வந்த அந்த நாட்களை இன்று நினைத்தாலும் என் நெஞ்சில் இனிமை சுரக்கிறது.

"மணப்பாறை மாடு கட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயல் காட்டை உழுதுபோடு சின்னக்கண்ணு!-பசுந்
தழையைப் போட்டு பாடுபடு செல்லக்கண்ணு"

போன்ற பாடலும்,

"ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமேயில்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமேயில்லே!"
"தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்!"