பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1கண்ணாவின் கடைவிழிகளில் மலரத் துடிக்கும் மொட்டுக்களைப் போல கண்ணீர்த் துளிகள் ததும்பி நிற்கின்றன. ஒரு நாள் கூட கண்ணா இவ்வளவு மனச் சங்கடத்தைத் தாங்கிக் கொண்டிருந்ததில்லை. அன்று மட்டும் அவள் அடங்காத் துயரத்திற்கு ஆளாகித் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள்.

“கண்ணா!” முகப்புக் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

இந்தக் குரலைத்தான் கண்ணா நெடுநேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அந்தக் குரல் பிருந்தாவனத்திலிருந்த கண்ணனின் குரலைப் போல் அவள் மனதுக்குப்பட்டது. புருஷனின் குரல் எவ்வளவுதான் கரகரப்பாக இருந்தாலும் மனைவிக்கு அதுதானே புல்லாங்குழல் இசை!

“என்ன கண்ணா ஒரு மாதிரியாக இருக்கிறாய்?”

கண்ணா பதில் பேசாமல் தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டாள்.

கண்ணப்பன் அவளைத் தழுவியபடி அழைத்துக் கொண்டு உள்ளே போய் விட்டான்.

உள்ளே போனதும் படுக்கை அறையிலுள்ள இரட்டைக் கட்டிலில் அவள் குப்புறப் படுத்துக்கொண்டு கோ என்று கதறினாள்.