பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


சசிகுமாரைக் கவர்ந்ததால் சசி அவனுக்கு உற்ற நண்பனாகிவிட்டான்.

கல்யாணமாகாத ஆணும், பெண்ணும் சந்தித்தால் அது காதலாகிவிடுகிறது. ஆகாவிட்டாலும் உலகம் அதைக் காதல் என்றே சொல்லிவிடும். ஆனால் இரண்டு ஆடவர்கள் சந்தித்தால் அதைப்பற்றி உலகம் கவலைப்படுவதே இல்லை.

சசி அன்று வீட்டுக்குள் நுழைந்தபோது கண்ணப்பனிடமிருந்து என்றும் போல் வரவேற்பு கிடைக்கவில்லை.

"சசி, இன்று என் மனம் சரியில்லை. என்னவோ போல் இருக்கிறது. சூரியோதயத்திலிருந்து பத்து நாழிகை வரை மனம் நிம்மதியாக இருந்துவிட்டால் அன்று முழுதும் கவலை அணுகாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நேற்று மாலையிலேயே என்னைத் துக்கம் முற்றுகையிட்டுவிட்டது” என்றான் கண்ணப்பன்.

"நல்ல நூல்களைப் புரட்டினால் எல்லாம் சரியாகிவிடும்.

"இந்த யோசனையை என்றைக்கும் நான் ஏற்றுக் கொண்டதில்லை. மனம் சரியாக இல்லாதபோது மனிதன் எதையும் ரசிக்க முடியாது. கோபமாக இருந்தாலே சாப்பிட முடிவதில்லை. கோபம் என்கிற போதை தணிகிறவரை குழந்தைகளின் குமிழ் சிரிப்புகூட மனதுக்குக் குளிர்ச்சி தருவதில்லை." கண்ணப்பன் இப்படிப் பதில் சொன்னான்.

"வீட்டில் அண்ணியார் இல்லையா? ஊருக்குப் போனவர்கள் இன்னும் திரும்பவில்லையோ?” சசி பேச்சை மாற்றினான்.

"பெண்கள் தாய் வீட்டுக்குப் போனாலே இப்படித்தானே! அவர்களது பழைய நினைவுகள் மறையவே பத்து நாட்களாகும். சிறுமியாக இருந்த, போது சிட்டிவைத்து விளையாடியதிலிருந்து .செப்புக்குடம் எடுத்து சேங்கைக்குப் போன காலம் வரை பேசிப் பேசிப் பொழுதைப் போக்குவார்கள்!' என்றான் கண்ணப்பன்.

"சரி இன்று நீங்கள் சோகமாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?"

"கவலைகள் பல விதம் உண்டு சசி, பிறர் தலையிட்டால் தீர்ந்து விடக்கூடிய கவலைகளும் உண்டு. யார் தலையிட்டாலும் தீராத கவலைகளும் உண்டு. இதில் என் கவலை இரண்டாவது வகை. இந்தத் திருவிதாங்கூர் மன்னரே வந்தாலும் என் கவலையைத் தீர்க்க முடியாது.