பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

255



சிற்றுரில் வாழ்பவன்; சிறந்த மறையவன்.......” எனப் பலபடப் பாராட்டப்பட்டுள்ளான்.[1] இதனால் பல்லவ மன்னர் தனிப்பட்ட கல்விமான்களைத் தாராளமாக ஆதரித்து வந்தனர் என்பது வெள்ளிடைமலை.

கோவில்கள்

பல்லவர் காலத்தில் கயிலாசநாதர் கோவில் போன்றவை பல்கலைப் பள்ளிகளாகவும் இருந்து வந்தன. அங்குச் சிற்பம், ஓவியம், இசை,நடனம், நாடகம், சமயக்கல்வி சாத்திரக்கல்வி இன்ன பிறவும் கற்பிக்கப்பட்டு வந்தன. நாகரிக நாட்டார் போற்றும் இக்கலைகள் அனைத்திற்கும் கோவிலே தாயகமாக இருந்தது. பத்திரப் பதிவும் (பட்டயமும் கல்வெட்டும் பிறவும்) அங்குத்தான் நடைபெற்று வந்தன. அப்பத்திரங்களிலிருந்தன்றோ, நாம், இன்று பல்லவர் வரலாற்றை அறிந்து இன்புறுகின்றோம்! பெரிய கோவில்களில் படிக்கும் மண்டபம், நடன மண்டபம், நாடக மண்டபம், தருக்க மண்டபம் முதலியன இருந்தன. மாபாரதம் போன்ற பழைய கதைகளைக்குடி மக்கட்கு ஊட்டி அவர் ஒழுக்கத்தை வளர்க்க முயன்றது கோவிலே ஆகும். சமய நூல்கள், தேவாரப் பதிகங்கள் முதலியன பாதுகாக்கப்பட்ட இடங்களும் கோவில்களே ஆகும். இங்ஙனம் இக் கோவில்கள் இருமைக்கும் இன்பம் ஊட்டும் நிலைக்களங்களாக இருந்தன.

மடங்கள்

இவை நீண்ட காலமாக நாட்டில் இருந்து வருபவை. இவை உண்டியும் உறையுளும் அளித்து மாணவர்க்குக் கல்வி கலைக் கூடங்கள் துறவிகள், கற்ற பெருமக்கள், நாடு முழுவதும் சுற்றித்திரிந்து உண்மை அறிவைத் தேடும் பெருமக்கள் ஆகியவர் தங்கும் இடங்கள்; ஏழைகள், திக்கற்றவர் முதலியோருக்குப் புகல் இடங்கள். இவை அரசர், சிற்றரசர், செல்வர் முதலியோரால் அமைக்கப் பட்டவை. இவை சமய உயர்தரக் கல்வியை ஊட்டி


  1. S.I.I. Vol. II, p.346.