பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

பல்லவர் வரலாறு



பெனுகொண்டா-பட்டயங்களில் ‘கங்க அரசனான தன் தந்தை அரிவர்மனையும் தன்னையும் கங்க நாட்டுப் பட்டயத்தில் ஏற்றிய பெருமை முறையே பல்லவ அரசரான சிம்மவர்மன் கந்தவர்மன் என்பவரையே சாரும்’ என்று குறித்துள்ளான். இதனால் மேற் கூறப்பட்ட கங்க அரசர் காலத்தவர் சிம்மவர்மன், கந்தவர்மன், என்னும் பல்லவ அரசர் என்பது எளிதிற் புலனாகின்றது. இக் கங்கர் பட்டயங்களை நன்கு சோதித்த டாக்டர் ப்ளிட் (Fleet) என்பார், ‘பல்லவர் தயவால் பட்டம் பெற்ற கங்க அரசர் காலம் ஏறக்குறையக் கி.பி. 475 என்னலாம்’ என்று முடிவு கூறியுள்ளார்.[1]

(2) லோகவிபாகம், (3) அவந்தி சுந்தரி சுதா. இவற்றைப் பற்றி இரண்டாம் பிரிவிற் கூறப்பட்டுள்ளது, ஆண்டுக் காண்க.

(4) அல்லகாபாத் கல்வெட்டு: வட இந்தியாவில் பெரும் புகழுடன் வாழ்ந்த சமுத்திர குப்தன் என்னும் பேரரசன் ஏறக் குறையக் கி.பி. 350இல் டெக்கானை நோக்கிப் படையெடுத்து வந்தான். அவனைக் கிருஷ்ணை, கோதாவரி என்னும் யாறுகளைச் சார்ந்த நாடுகளில் இருந்த அரசர் பலர் ஒன்று சேர்ந்து எதிர்த்தனர். அவன் அவர்களை வென்று முடிவில் காஞ்சி அரசனாக இருந்த விஷ்ணுகோபன் என்பவனையும் வென்றதாக அவனது (அல்லகாபாத்தில் உள்ள) கல்வெட்டுக் கூறுகின்றது.

இதுகாறும் கண்ட வெளி அரசர் பட்டயங்களாலும் வடமொழி நூல்களாலும் கீழ்வரும் செய்திகளை ஒருவாறு அறியலாம்:

(1) விஷ்ணு கோபன் காலம் ஏறக்குறையக் கி.பி. 350

(2) சிம்மவர்மனும் கந்தவர்மனும் கங்கரை அரசராக்கிய காலம், கி.பி 436-475

(3) பிற்காலப் பல்லவருள் முதல்வனான சிம்மவிஷ்ணுவின்


  1. Ep. Carnataka Vol. III, No.142, MER. 1914, p.52
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/76&oldid=583601" இலிருந்து மீள்விக்கப்பட்டது