பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

பல்லவர் வரலாறு



7ஆம் நூற்றாண்டிற் செய்யப்பெற்ற அப்பர், சம்பந்தர் பாடல்களைக் கொண்டு நன்குணரலாம். வேத வேள்வியே இல்லாத பழைய சிவன், வடவர் கலப்பால் வேள்விக்குரிய மகாதேவன் ஆயினன். தமிழ் முருகன் சுப்பிரமணியன் ஆயினன்; தமிழக் கொற்றவை துர்க்கை ஆயினள்[1] பல பல கிளைச் சமயத்தார் வழிபட்டுவந்த மூர்த்திகளை எல்லாம் சிவனுடன் சேர்த்து, ஐயனார் சிவனது அம்சம், விநாயகர் சிவனது பிள்ளை என்றெல்லாம் கூறி, அதற்கேற்பக் கதைகள் வரையப்பெற்றன. இத்தகைய மாறுதல் தமிழ்நாட்டில் ஏறத்தாழக் கி.பி. முதல் ஆறு நூற்றாண்டுகளில் நடந்து முடிந்தன என்னலாம். சைவ சமயம் பல கிளைகளாகப் பிரிந்து இருந்தது. அப் பல பிரிவினர், பெளத்தரும் சமணரும் தெற்கே வந்தபொழுதோ-அதற்கு முன்னரோ - பின்னரோ தென்னாடு புக்கனர். இவரே பாசுபதர், காபாலிகர், காளாமுகர் முதலியோர். இவர்தம் பெயர்களில் ஒன்றேனும் தமிழ்ப் பெயராக இருத்தல் அருமை; ‘தேவ சோமா’ முதலிய பெயர்களை மத்த விலாசத்திற் காண்க. இவர்தம் பழக்க வழக்கங்களும் தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்கட்கு முற்றும் மாறுபட்டவை. ‘அன்பே சிவம்’ என்ற மணிவாசகர் - அப்பர் - சம்பந்தர் கொண்ட சைவ சமயத்திற்கும் இவர்கள் கொண்ட சைவ சமயத்திற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு காணலாம். எனினும், இக் கிளையினர் கொள்கைகள் பல தேவாரப் பதிகங்களிற் புகுந்துவிட்டன. இஃது அக்கால நிலையேயன்றி வேறன்று. சமண-பெளத்த சமயங்களை அடக்கத் தொடங்கிய பழந்தமிழ்ச்சைவம், ஒருபால் வைதிகத்தையும் மறுபால் இக் கிளைகளையும் தழுவி இவற்றின் துணைகொண்டு அவற்றை அடக்கிவிட்டது என்பது நன்கு தெரிகிறது.

பாசுபதர்

இவர் பழக்கங்களும், நம்பிக்கைகளும் விந்தையானவை இவர் சில சமயங்களில் ‘மயேச்சுரர்’ எனவும் கூறப் பெறுவர். இவர் திருநீற்றை அணிவர்; சிவனே முழு முதற்கடவுள் என்பர்; லிங்கத்தை அல்லது சிவமூர்த்தத்தை வணங்குவர். இவருட் சிலர் தலை


  1. T.R.Sesha Iyengar’s “Ancient Dravidians."