பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைக்காலப் பல்லவர்

71



சிலர். சாளுக்கியர் பேரரசை ஏற்படுத்த முனைகையில், பேரரசராக இருந்த பல்லவர்க்குப்பகைமைதோன்றல் இயல்பன்றோ? ஆதலின், இன்று நாம் அறிய முடியாத வகையில் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மேற்சொன்ன போர்கள் நிகழ்ந்திருக்கலாம். மேலும், இடைக்காலப் பல்லவர் ஆந்திர பதத்திலும் (சாளுக்கிய நாட்டிற்கு அண்மையில்) இருந்து அரசாண்டனர் என்பதை நினைவிற் கொண்டால், இக்கதை உண்மையாக இருக்கும் என்று நம்பலாம். இது நிற்க.

(1) விசயாதித்தன் மகனான ஜயசிம்மன் சாளுக்கிய அரசனான பொழுது அவனுடன் பல்லவரும் இராட்டிர கூடரும் ஓயாது போரிட்டனர். எனினும், ஜயசிம்மன் தன் அரசை நிலைநிறுத்திக் கொண்டான். அவனுக்குப் பின்வந்த அவன் மகனான இரணதீரனும் பல்லவருடன் போரிட்டான்.[1]

இவர்கள் காலத்தில் பல்லவ அரசனாக இருந்தவன்பெரும்பாலும் முதலாம் நந்தி வர்மன் (கி.பி. 525-550) ஆவன். இவன் விஷ்ணுகோபன் ஈறான அரசர் பலர் இறந்தபின் பிறந்தவன்; சிவபிரான் அருளால் வன்மை மிக்க நாக அரசனை நடனம் செய்வித்தான் என்று வேலூர் பாளையப் பட்டயம் பகர்கின்றது. இந்த ‘நாக அரசன்’ யாவன்? ‘சூட்டுநாகர், கதம்பர், சாளுக்கியர்’ ஆகிய மூவரும் தம்மை ‘மானவ்ய கோத்திரத்தார்’ என்றும், ‘நாக மரபினர்’ என்றும் கூறிக் கொண்டனர்.[2] இவருள் சூட்டு நாகர் நந்திவர்மன் காலத்தில் வரலாற்றிலிருந்தே மறைந்து விட்டனர்; கதம்பரும் சாளுக்கியரும் போர்களில் ஈடுபட்டு இருந்தனர். மேலும், இரவி வர்மனுக்குப்பின்வந்த கதம்பர் பல்லவருடன் போர் செய்த குறிப்புக் கல்வெட்டுகளில் இல்லை. அவர்கள் ஓய்வின்றி வடக்கே சாளுக்கியரிடம் போராடின காலம் அது. ஆதலின் நந்திவர்மன் நடுங்கச் செய்த நாக அரசன் சாளுக்கியனாகத் தான் இருத்தல்

  1. S.II. vol II p.510.
  2. Bombay gazatteer - pp.180, 277-280, 286.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/91&oldid=583616" இலிருந்து மீள்விக்கப்பட்டது