பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

பல்லவர் வரலாறு



புதிய பா வகைகளை விளக்க வந்த புதிய பாடல்கள் பலவாகவும், இருத்தலை நோக்க - யாப்பருங்கல விருத்தியுரையுட் கூறப்படும் பல்வேறு இலக்கண நூல்களும் மேற்கோள் பாடல்களும் சங்க இறுதிக்கும் கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற் றான் செய்யப்பட்டன என்பதை நன்குணரலாம். அக்காலமே பல்லவப் பேரரசு இருந்த (கி.பி. 250-900) காலமாகும். மேலும் எட்டாரைச்சக்கரம் போன்ற புதியவை அனைத்தும் பல்லவ மல்லன் காலத்தில் தோன்றின என்பது மேற்கூறப் பெற்ற செய்யுளைக் கொண்டு தெளிவாக அறியலாம். இதனை விரிக்கிற் பெருகும். யாப்பருங்கல விருத்தி உரைநோக்கி ஆராய்ந்து உண்மை உணர்க.

மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850)

இவன் காடவர் கோன் கழற் சிங்கன் எனப் பெரிய புராணத்தும், ‘நந்தி, பல்லவர் கோளரி என்று நந்திக்கலம்பகத்தும் கூறப்பட்டவன். யாப்பருங்கல விருத்தியுரையில், கச்சியார் கோ-சிங்கன் என்றும், ‘நந்தி என்றும் கோன் நந்தி என்றும் வரும்தனிப்பாடல்கள், பொருள் நோக்கி, இவனையே குறிப்பனவாகக் கொள்ளலாம்.

அவை வருமாறு

(1) ‘நிலமகள் கேள்வனும் நேர் கழலி னானும்
நலமிகு கச்சியார் கோவென்பவே
நலமிகு கச்சியார் கோவாயி னானும்
சிலைமிகு தோள்சிங்கன் அவன்என்பவே
செருவிடை யானை அவனென்பவே”[1]
(2) “வரைபெரிய மத்தாக வாளரவம் கயிறாகத்
திரையிரியக் கடல் கடைந்து திருமகளைப் படைத்தனையே[2]
உலகொடு நிலவிய ஒருபுகழ் சுமந்தனை”[3]
  1. யா-விருத்தி சூ.87 உரை.
  2. இஃது இராட்டிரகூடரை வென்றதால், திருமகள் போன்ற இராட்டிரகூட இளவரசியாகிய சங்காவை மனைவியாகப் பெற்றமை கூறப்பட்டது; vide Bahur plates.
  3. இது நீண்ட கலிப்பா, பா-விருத்தி, சூ.86 உரை.