பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

பல்லவர் வரலாறு



வல்லாரிடம் முறைப்படி பாடம் கேட்டவன் சிற்ப ஒவிய நடனக் கலைகளில் பேரார்வம் கொண்டவன். போரிற் சிறந்தவன்’ என்பவற்றை நன்கறியலாம். இவன் செய்த மத்த விலாசத்திலிருந்து, ‘இவன் தந்தை பால் மிக்க மதிப்புடையவன்; தன் நாட்டுப் பல சமயங்களை ஆராய்ந்து அறிந்தவன். கலாவிநோதன்’ என்பவற்றை நன்கறியலாம். இவன் எச்சமயத்தில் இருப்பினும், அதனைப் பழுதற உணர்ந்தவன் என்பதற்குச் சித்தன்னவாசல் (சமணத்தைப் பற்றிய) சித்திரங்களும் திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் (சைவத்தைப் பற்றிய) கல்வெட்டும் தக்க சான்றாகும்.


10. நரசிம்மவர்மன்
(கி.பி. 630 - 668)[1]

மகேந்திரவர்மனைப் போன்ற பெருவீரனாகவே அவன் மகனான நரசிம்மவர்மன் விளங்கினான். இவனது ஆட்சி தென் இந்திய வரலாற்றில் சிறப்பிடம் பெற்றதாகும். இவன் காலத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை: (1) வாதாபியைக் கைப்பற்றினமை, (2) இலங்கைப் படையெடுப்பு (3) கோவில்களும் கோட்டைகளும் அமைத்தமை. (4) சீனச்செலவினன் காஞ்சிக்கு வந்தமை, (5) தமிழ் நாட்டுச் சைவநிலை முதலியன.

பல்லவர்-சாளுக்கியர் போர்

(1) பட்டயக் கூற்று:- மகேந்திரவர்மனிடம் படுதோல்வியுற்ற இரண்டாம் புலிகேசி, நரசிம்மவர்மன் பட்டம் பெற்ற சில ஆண்டுகட்குள் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான். முன் போலவே புலிகேசி காஞ்சியை அண்மினான். காஞ்சிக்கு அருகில் உள்ள மணிமங்கலம் முதலிய இடங்களில் கடும்போர் நடந்தது. இப் போரைப் பற்றியும் இதன் பின்விளைவுகளைப் பற்றியும் பல்லவர்


  1. Dr N.Venkataramanyya’s article on “Durvinita and Vikramaditya’ (triveni) p. 116