பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

307



இவனைப்பற்றிய பாடல்கள் தமிழ் நாவலர் சரிதை, தொண்டை மண்டல சதகம் முதலியவற்றிற் காணலாம்.[1] சான்றாக ஒன்றை இங்குக் காண்க.

அச்சுதன் மதுரை கொண்டது

“முரசதிர் வியன்மதுரை முழுவதுஉம் தலைபனிப்பப்
புரைதொடித் திரள்தோள் போர்மலைந்த மறமல்லர்
அடியோடு முடியுறுப்புன்டயர்ந்தவன் நிலஞ்சேரப்
பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ”[2]

முத்தரையரும் தமிழும் (கி.பி. 700-800)

தஞ்சையை ஆண்ட முத்தரையர்க்குத் தமிழ்ப்பற்று மிக்கிருந்தது. அவருள் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இருந்தவன் பெரும் பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் என்பவன் இவன் புலவர் பலரை ஆதரித்தவன்; இவனைப் புகழ்ந்து (1) பாச்சில் வேள் நம்பன், (2) ஆசாரியர் அநிருத்தர், (3) கோட்டாற்று இளம்பெருமானார், (4) குவாவங் காஞ்சன் என்போர் வெண்பாக்கள் பாடியுள்ளனர். அவை செந்தலையில் உள்ள சிவன்கோயில் கல்வெட்டுகளில் காண்கின்றன. அவற்றால் இம்மன்னன் அழுந்தியூர், மனலூர், கொடும்பாளுர், காரை, கண்ணனூர், அண்ணல்வாயில் என்ற இடங்களில் நடந்த போர்களில் வெற்றி பெற்றவன் என்பது தெரிகிறது. இனி, ஒவ்வொரு புல்வரையும் அவர் பாடிய பாக்களையும் பற்றிக் காண்போம்.

(1) பாச்சில் வேள் நம்பன்

இவர் மழநாட்டுத் திருப்பாச்சில் (ஆச்சிரமம்) என்னும் ஊரினர் என்பதும், வேளிர் குலத்தவர் என்பதும் இவர் தம் பெயரால் அறியப்படும். இவர் பாடியவை ஐந்து வெண்பாக்கள். அவற்றுள் ஒன்று காண்க:


  1. K.A.N. Sastry’s “Cholas’ Part I, p.121.
  2. யா-விருத்தி சூ 83. உரை, இது விளக்கத்தனார் பாடியுள்ள நீண்ட கலிப்பாவின் ஒரு பகுதி.