பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

பல்லவர் வரலாறு



கம்பவர்மன் காலத்துப் பள்ளிப்படை ஒன்று உண்டு. அஃது இராசாதித்தன் என்ற தலைவன் தன் தந்தையான பிருதிவி கங்கராயன் என்பவன் இறந்த இடத்தில் எழுப்பிய சமாதி கொண்ட கோவிலாகும்; தம் அப்பனாரைப் பள்ளிப் படுத்த இடத்து ஈசராலயமும் அதீ தகரமும் (சமாதியும்?) எடுப்பித்துக் கண்டு செய்வித்தான் என்பது கல்வெட்டு.[1]


19. கலைக் கழகங்கள்

முன்னுரை

பண்டைக் காலக் கல்விமுறை இக்காலக் கல்விமுறையில் முற்றும் மாறுபட்டதாகும். அக்காலக் கல்வி, இக்காலக் கல்வி முறைப்படி தொடக்கக் கல்வி, நடுத்தரக்கல்வி, பல்கலைக் கழகக் கல்வி எனப்பலபிரிவுகளை உடையதன்று. உலகில் அறம், பொருள், இன்பம் நுகரவும் வீடுபேற்றுக்குரியநெறியிற் பயிலவுமே பண்டைக் காலத்தார் கல்வி கற்றனர். அவர்கள் உயிர்க்கு உறுதி பயக்கும் கல்வியையே சிறப்பாகக் கொண்டனர்.

ஒவிய - சிற்பக் கலைக்கூடங்கள்

பல்லவரை உலகம் புகழ வைத்த பெருமை ஒவிய-சிற்பப் புலவர்கட்கே உரித்தானது. உயிருள்ள சித்தன்னவாசல், ஓவியங்கள், மாமல்லபுரம், வைகுந்தப் பெருமாள்கோவில், கயிலாசநாதர் கோவில் இவற்றில் உள்ள வியப்பூட்டும் சிற்பங்கள் இன்ன பிறவும் இயற்றிய பெருமக்கள் கலை அறிவை நாம் என்னெனப் புகழ்வது?

ஓவியம் வரைதலும் சிற்பம் பொறித்தலும் எளிய செயல்கள் அல்ல. பல்லவர் கால ஓவிய சிற்பங்கள் இற்றைக்கு 1300 ஆண்டுகட்கு முற்பட்டவை; ஆயினும் இன்று செய்தாற் போலக் காட்சி அளிப்பவை எனின், இவற்றில் அமைந்துள்ள வேலைத்திறனை என்னென்பது!


  1. 429 of 1902.