பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகேந்திரவர்மன்

95



‘பல்லாவரம்’ எனவும் லால்குடி தாலுகவில் உள்ள பல்லவபுரம் ‘பல்லவரம்’ எனவும் வழங்குகின்றன.

(3) வல்லம்

வல்லம் என்பது செங்கற்பட்டிற்குக் கிழக்கே திருக்கழுக் குன்றத்திற்குப் போகும் சாலையில் இரண்டு கல் தொலைவில் உள்ளது. அங்கு ஒரு சிறிய குன்று இருக்கிறது. அக் குன்றில் மூன்று குகைகள் இருக்கின்றன. நடுக்குகை பெரியது. அதன் வாயில் உள்ள இரண்டு தூண்களில் ஒரு கல்வெட்டுத் தமிழில் உள்ளது. இது.

“பகாப்பிடுகு லளிதாங்குரன்
சத்துரு மல்லன் குணபரன்
மயேந்திரப் போத்தரசன் அடியான்
வயந்தப்பிரிஅரசர் மகன் கந்தசேனன்
செய்வித்த தேவ குலம்”

என்பது.

அஃதாவது, ‘மகேந்திரனதுசிற்றரசனான வசந்தப்பிரியன் மகனான கந்தசேனன் குடைவித்த கோவில்’ என்பது பொருள். அதனால், இக் கோவில் ‘வசந்தேசுவரம்’ எனப் பட்டது. இது சிறிய உள்ளறையையும் முன் மண்டபத்தையும் வலப்பக்கம் ஜேஷ்டாதேவியின் சிலையும் இடப்பக்கத்தில் பிள்ளையார் சிலையும் இருக்கின்றன. உள்ளறையில் லிங்கம் ஒன்று இருக்கிறது. அந்த லிங்கம் வட்ட வடிவினது. உள்ளறையின் இருபக்கங்களிலும் வாயிற் காவலர் நிற்கின்றனர். அவர்கள் நேரே பார்க்கின்றனர். கால்கள் ஒன்றன்மேல் ஒன்றாகக் குறுக்கிட்டுள்ளன. அவர் தலையில் இரண்டு கொம்புகள் இருக்கின்றன. அவர் கைகள் தடிமீது பொருந்தி இருக்கின்றன.

(4) மாமண்டூர்

இது கச்சிக்குத் தெற்கே ஆறு கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள ஒரே சிறிய குன்றில் நான்கு கோவில்கள் உள்ளன.