பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

பல்லவர் வரலாறு



வேலைகளைச் செய்து வந்தவர் கூட்டமே ‘பஞ்சவார வாரியம்’ எனப்பட்டது. குடிகள் கொடுத்த நெல் ‘பஞ்ச வாரம்’ (வாரம்-பங்கு) எனப்பெயர் பெற்றது. இது பற்றிய செய்தி மூன்றாம் நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில், “திருக்காட்டுப் பள்ளிப் பஞ்சவாரம் ஆயிரக்காடி நெல்,” என்னும் தொடரில் காணப்படுகிறது.[1]

அறப்பணிகள்

ஒருவரை அவரது செயலுக்காகப் பாராட்டி அவர் பெயரால் கோவிலிற் பொன் கொடுத்து விளக்கு வைத்தலோ வேறொன்று நடைபெறச் செய்தலோ அக்காலப் பழக்கங்கள் பலவற்றுள் ஒன்றாகும். மாடு பிடிப்போரில் மாண்டவீரர் இருவர் நினைவுக்காகப் பல்லவர் சிற்றரசன் ஒருவன், குறிப்பிட்ட மதிப்புள்ள பொன்னைக் கோவிலுக்குத் தானம் செய்து, அவர் நினைவுக்கறிகுறியாக விளக்கிடச் செய்தான்.[2]

நிருபதுங்கன் ஆட்சிக்காலத்தில் இத்தகைய செயல்கள் சில நடைபெற்றன. அவற்றுள் ஒன்று திருத்தவத் துறைச் சிவன்கோவில் கல்வெட்டுக் குறிக்கும் செய்தியாகும். பூதிகந்தனிடம் பொன்னைப்பெற்ற இடையாறு நாட்டு அவையார், அப்பொன்னுக்கு வட்டியாக ஆண்டு தோறும் நெல் அளந்து கொடுத்துச் சித்திரை விசுத்திருவிழாவை நடத்த உடன்பட்டனர். அப்பொன் பூதி கந்தனின்


  1. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas’, pp.119,120 ‘பிற்காலச் சோழர் ஆட்சியில் பல பஞ்சங்கள் உண்டாயின. அவற்றுள் மூன்றாம் குலோத்துங்கன்ஆட்சியில் உண்டானது கொடியது; ஒரு காசுக்குக் கால்படி அரிசி விற்றது. இப்பஞ்சக் கொடுமையை நீக்கச் செல்வர் பலர் குளம் எடுத்தல், ஆற்றுக்குக் கரையிடுதல் முதலிய பணிகளில் மக்களைப் புகுத்திக்காசு கொடுத்து உதவினர்’ என்பது இங்கு நினைக்கத்தக்கது. K.A.N. Sastrys “The Cholas “Vol.II Part I, p.135.
  2. 283 of 1916