பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

பல்லவர் வரலாறு



இத் தூக்கிய திருவடி நடனச்சிலைகள் சிவ சூடாமணி ஆகிய இராசசிம்மன் உள்ளத்தைக் கொள்ள கொண்டதாகும். அதனாற்றான் இந்நடனச் சிலைகள் பல கயிலாசநாதர் கோவிலில் காணப் படுகின்றன. இவனுக்குப்பின்வந்த மூன்றாம் மகேந்திரவர்மன், தான் (கயிலாசநாதர் கோவிலுக்கு எதிரில்) கட்டிய சிவன்கோவிலில் இதே நடனத்தைக் குறிக்கும் சிற்பத்தை அழகிய முறையில் அமைத்துள்ளான். இச் சிற்பங்கள் மிகவும் நுட்பமான வேலைப்பாடு கொண்டவை ஆகும்.[1] இவற்றை நேரிற் காண்பவரே இவற்றின் அருமை பெருமைகளையும் சிவபக்தர்களான பல்லவப் பேரரசர் கலைஉணர்வின் நுட்பத்தையும் உள்ளவாறு உணர்தல் கூடும். ‘சங்கர பக்தனான இராசிம்மன் தில்லை நடராசர் கூத்தினும் சிறிது வேறுபட்ட கூத்தை (இறுதியிற் சொன்ன குஞ்சிதக் கூத்தை)த் தனதாகக் கொண்டது, அவனது கூத்தறிவின் பேரெல்லையை உணர்த்தி நிற்கின்றது. இங்ஙனம் பல்லவப் பெருவேந்தர் கூத்திலக்கணப் பண்புகளை முற்ற உணர்ந்தவராய்த் தாம் கட்டிய கோவில்களில் அவற்றை அணிபெற அமைத்து மக்கள் மனத்தைத் தூய கலைகளிற் புகச் செய்து பேரின்பப் பெருவாழ்வை அளித்துதவினர் என்னல் மிகையாகது.


22. ஒவியமும் சிற்பமும்

சித்தன்னவாசல்

பல்லவர் கால ஓவியங்களை இன்று நன்கு காட்டத்தக்க இடம் சித்தன்னவாசல் ஒன்றேயாகும்.

இடமும் காணத்தக்கனவும்

சித்தன்ன வாசல் புதுக்கோட்டையைச் சேர்ந்தது; திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே 20 கல் தொலைவில் உள்ளது; நாரத்தாமலைப் புகைவண்டி நிலையத்திலிருந்து இரண்டு கல்


  1. Dr. C. Minakshi’s “Adminitration and Social Life under the Pallavas’ pp.281-286.