அலை ஓசை/பூகம்பம்/மலர் பொழிந்தது!

விக்கிமூலம் இலிருந்து

அன்று இரவு மாப்பிள்ளை சம்பந்தி வகையறாவுக்காகச் சாப்பாடு கொண்டு வைத்து விட்டு வந்த பரிசாரகன் சங்கரனைப் பார்த்துச் சரஸ்வதி அம்மாள், "ஏண்டா, சங்கரா! அவர்கள் என்னடா பேசிக் கொண்டிருக்கிறார்கள்? ஏதாவது உன் செவிட்டுக் காதில் விழுந்ததா?" என்று கேட்டாள். "காதில் ஒன்றும் விழவில்லை அம்மா! விழுந்த வரையில் அவ்வளவு சுவாரஸ்யமாயில்லை என்றான்?" "என்னடா உளறுகிறாய்? காதில் ஒன்றும் விழவில்லை, அவ்வளவு சுவாரஸ்யமாயில்லை என்றால்?" "ஏதோ சில வார்த்தை அரைகுறையாகக் காதில் விழுந்தது. பணங்காசைப் பற்றித்தான் பேச்சு. பதினாயிரமாம்! பதினையாயிரமாம்! இவ்வளவு படித்தவர்கள் - பெரிய மனிதர்களே இப்படி இருந்தால்.... "அதனால் என்னடா மோசம்? பிள்ளையைப் பெற்றவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். நாளைக்கு நம் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கலியாணம் என்றால் நாம் மட்டும் பணங்காசு இல்லாமல் பண்ணிக் கொண்டு விடுவோமா?

அதிலேயும் அந்தப் பிராமணர் கொஞ்சம் கடிசல் என்று கேள்வி. அப்படியெல்லாம் வாய் கூசாமல் ரொம்பக் கேட்கக் கூடாது என்று பிள்ளைக்குத் தாயார் ஒருவேளை சொல்லிக் கொண்டிருப்பாள். என்னைக்கேட்டால் பேச வேண்டியதை யெல்லாம் இப்போதே பேசிக் கறார் செய்து கொண்டு விடுவதுதான் நல்லது என்பேன். அப்புறம் புகாருக்கு இடம் இருக்கக் கூடாது பார்!" இவ்விதம் சரஸ்வதி அம்மாள் வாய் ஓயாமல் பேசினாள். எனினும் அவளுடைய மனத்தில் இருந்த பரபரப்பு அடங்கவில்லை. சீதாவைக் கூப்பிட்டு, "குழந்தை! அவர்கள் இறங்கியிருக்கிற வீட்டுக்குப் போய் வேண்டியதெல்லாம் வந்து விட்டதா? இன்னும் ஏதாவது வேண்டுமா?' என்று சம்பந்தியம்மாளை விசாரித்து விட்டு வருகிறாயா? அதோடு சீமாச்சு மாமாவை இங்கே உடனே வரச் சொல்லு!" என்றாள். சீதா அவர்கள் இறங்கியிருந்த வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற போது வழியில் சீமாச்சுவய்யர் வந்து கொண்டிருந்தார். ஆயினும் அவள் திரும்பாமல் மேலே சென்றாள். வீட்டின் முன்புறத்து ஹாலில் சௌந்தரராகவன் சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தான். சீதாவைப் பார்த்ததும் அவன் நிமிர்ந்து உட்கார்ந்து, "நீ மட்டும் வந்தாயா? உன் தோழியையும் அழைத்துக்கொண்டு வந்தாயா?" என்று கேட்டான்.

சீதா சிறிது தயங்கிவிட்டுப் பிறகு, "நான் மட்டுந்தான் வந்தேன்! நீங்கள்தான் லலிதாவைக் காபராப்படுத்தி விட்டீர்களே?" என்று சொன்னாள். "அவள் இன்னும் அழுதுகொண்டுதானிருக்கிறாளா" அல்லது அழுகையை நிறுத்தியாச்சா?" என்று சௌந்தரராகவன் கேட்டான். "அழவும் இல்லை ஒன்றும் இல்லை; எதற்காக அழ வேண்டும்!" "அவளைப் பாடச் சொன்னதற்குப் பாடத்தான் இல்லையே? ஒருவேளை அழ ஆரம்பித்து விட்டாளோ என்று பார்த்தேன். போகட்டும்; நீயாவது இந்த மட்டும் வாயைத் திறந்து பேசுகிறாயே? சந்தோஷம். அவளைப்போல் நீயும் பேசாமடந்தையாயிருந்தால் ஆபத்துதான்" என்றான். "என்னையும் யாராவது பெண் பார்ப்பதற்கென்று வந்திருந்திருந்தால் நானும் பேசாமடந்தையாகத்தான் இருப்பேன்!" என்று சொல்லிவிட்டு, இதற்குமேல் அங்கே நிற்கக் கூடாது என்று எண்ணிச் சீதா உள்ளே சென்றாள். அவளுடைய நெஞ்சு எக்காரணத்தினாலோ படபடவென்று அடித்துக் கொண்டது. காமாட்சி அம்மாளும் சாஸ்திரிகளும் கூடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள், சீதாவைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தினார்கள். "குழந்தை! எங்கேயம்மா வந்தாய்?" என்று காமாட்சி கேட்டாள். "சாப்பாடு எல்லாம் சரியாய் வந்ததா என்று மாமி பார்த்து விட்டு வரச் சொன்னாள்!" என்றாள் சீதா. "எல்லாம் சரியாய் வந்து சேர்ந்தது என்று சொல்லு. அவ்வளவுதானே?"

"அவ்வளவுதான் மாமி! லலிதாவைப் பற்றி ஒரு வார்த்தை நானே சொல்ல வேண்டுமென்று வந்தேன். இன்றைக்கு ஏதோ அவள் பேசாமல் நின்றாளே என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். எங்க லலிதாவைப் போல் இந்தப் பூலோகத்திலேயே சமர்த்து கிடையாது. கலகலவென்று பேசிக் கொண்டிருப்பாள். பாட்டு என்னை விட எவ்வளவோ நன்றாய்ப் பாடுவாள். குரல், குயிலின் குரல்தான்! இன்றைக்கு என்னமோ கலியாணத்துக்குப் பார்ப்பதற்கு என்று புது மனுஷர்கள் வந்ததும் கொஞ்சம் பயந்து போய் விட்டாள். அதைப் பற்றி நீங்கள் ஒன்றும் நினைத்துக் கொள்ளக் கூடாது!" "இந்தப் பெண் வெகு பொல்லாத பெண்ணாயிருக் கிறாளே?" என்றார் பத்மலோசன சாஸ்திரிகள். "அதனால்தான் உங்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது போலிருக்கிறது;- இவள் தான் ஒருவேளை கலியாணப் பெண்ணோ என்று!" "அதனால்தான் என்ன; இவளுக்கும் ஒரு நாள் கலியாணம் நடக்க வேண்டியதுதானே; ஏனம்மா, உன் தகப்பனாருக்குப் பம்பாயில் என்ன உத்தியோகம்?" என்று சாஸ்திரிகள் கேட்டார். "எங்க அப்பாவுக்கு ரயில்வேயில் உத்தியோகம், மாமா." "சம்பளம் என்னவோ?" "சம்பளம் மாதம் முன்னூறு ரூபாய். ஆனால் எவ்வளவு சம்பளமாயிருந்தால் என்ன? எல்லாம் செலவுக்குத்தான் சரியாயிருக்கிறது. என்னைப் பார்த்தாலே தெரிந்து விடுமே?"

"லலிதாவைப் போல் நகைநட்டுப் போட்டுக் கொள்ளவில்லை என்று அவ்விதம் சொல்கிறாயா? ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் அருள் இருந்தால் நீயும் ஒரு நாளைக்கு வேண்டிய நகை நட்டுக்கள் பூட்டிக் கொள்வாய்!" என்றாள் காமாட்சி அம்மாள். "இராமச்சந்திர மூர்த்தியின் அருள் கேவலம் நகை நட்டுக்குத்தானா வேண்டும்" என்றார் சாஸ்திரிகள். "நகை நட்டுக்குந்தான் வேண்டும்; மற்ற எல்லாவற்றுக்குந்தான் வேண்டும். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது! இருக்கட்டும், சீதா! உன் கலியாணத்தைப்பற்றி உன் அப்பா ஒன்றும் ஏற்பாடு செய்யவில்லையா? வரன், கிரன் பார்க்கவில்லையா?" "மாமி! எங்க அப்பா 'எர்லி மாரியேஜ்' கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவர், நானும் எங்க அப்பா கட்சிதான். ஆனால் அம்மா மட்டும் ஓயாமல் வரன் வரன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். உங்களிடத்தில் கூட நாளைக்கு ஏதாவது சொன்னாலும் சொல்லுவாள் நீங்கள் கவனிக்க வேண்டாம்!...." "ஏன், அம்மா அப்படிச் சொல்கிறாய்? காலா காலத்தில் உனக்கும் கலியாணம் நடக்க வேண்டியதுதானே?" என்றாள் காமாட்சி. "நடக்க வேண்டியதுதான். ஆனால் ஐயாயிரத்தைக் கொண்டு வா, பத்தாயிரத்தைக் கொண்டு வா என்று கேட்கிறார்களே, அதற்கு எங்க அப்பா எங்கே போவார்? அதனால்தான் நான் கலியாணமே பண்ணிக் கொள்வதில்லை என்று வைத்திருக்கிறேன்."

"பெண்ணாகட்டும்; பிள்ளையாகட்டும் இப்படியல்லவா பெற்றவர்கள் விஷயத்தில் பயபக்தியோடு இருக்க வேண்டும்?" என்றார் சாஸ்திரிகள். "லலிதா மட்டும் என்ன! அப்பா அம்மா கிழித்த கோட்டைத் தாண்டமாட்டாள், மாமா! நாளைக்கு உங்கள் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு விட்டால் உங்களிடத்திலும் அப்படியே நடந்து கொள்வாள். நீங்கள் புறப்பட்டு வந்த பிறகு நான் அவளிடம் என்ன சொன்னேன், தெரியுமா? 'லலிதா! கலியாணம் ஆன பிற்பாடு மாமனாரும் மாமியாரும்தான் அப்பா அம்மா என்று நினைத்துக்கொள். சொந்தத் தாய் தகப்பனார் கூட அப்புறந்தான்!' என்று சொன்னேன். லலிதாவும் 'அதற்கு என்னடி சந்தேகம்?' என்றாள். கேட்டீர்களா! மாமி! இந்தக் காலத்து மாட்டுப் பெண்களைப் போல் மட்டு மரியாதையில்லாமல், தாட்பூட் என்று லலிதா நடந்து கொள்ள மாட்டாள். நான் ஏதோ சிறு பெண் சொல்லுகிறேனே என்று வித்தியாசமாய் நினைத்துக் கொள்ளாதீர்கள். எங்கள் லலிதாவைக் கல்யாணம் செய்து கொள்ள உங்கள் பிள்ளை கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் பிள்ளையைக் கல்யாணம் செய்து கொள்ள லலிதாவும் கொடுத்து வைத்தவள்தான்! சந்தேகமில்லை." "இந்தப் பெண் அபார சமர்த்தாயிருக்கிறாளே!" என்றார் சாஸ்திரிகள். இதைக் கேட்டுச் சீதாவின் உள்ளம் குதூகலம் அடைந்தது.

அதற்குமேல் அங்கே பேசிக்கொண்டு நிற்பது நியாயமில்லை என்று உணர்ந்தாள். "மாமி! நான் போய் வருகிறேன். ஏதாவது தப்பாய்ச் சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்!" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். போகும்போது வழியில் முன் இருந்த இடத்திலேயே இருந்த ராகவன், "நீ அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததையெல்லாம் கேட்டேன். பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வக்கீல் வைத்திருந்தால் கூட நீ உன் தோழியின் கட்சியைப் பேசியது போல் யாரும் பேசியிருக்க மாட்டார்கள். உன்னைச் சிநேகிதியாகப் பெறுவதற்கு உன் தோழியும் ரொம்பக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!" என்றான். "தாங்க்ஸ்" என்றாள் சீதா. "எனக்கு எதற்குத் தாங்க்ஸ்? நான் அல்லவா உனக்குத் தாங்க்ஸ் சொல்ல வேண்டும்?" "நீங்கள் இப்போது தாங்க்ஸ் கொடுத்தால் நான் பெற்றுக் கொள்ளமாட்டேன். நாளைக்குக் கலியாணம் நிச்சயம் செய்து விட்டுக் கிளம்பினால் அப்போது பெற்றுக் கொள்வேன்." "கலியாணம் நிச்சயம் செய்ய வேண்டியதுதான். ஆனால் அதற்கு இரண்டு கட்சியின் சம்மதம் அல்லவா வேண்டியதாயிருக்கிறது" என்று ராகவன் கூறிவிட்டுப் புன்னகை புரிந்தான். அதற்குப் பிரதியாகச் சீதாவும் புன்னகை செய்துவிட்டுப் புறப்பட்டாள். சௌந்தரராகவனுடைய வார்த்தைக்கும் புன்சிரிப்புக்கும் பொருள் என்ன என்பது அவள் மனத்திற்குத் தெளிவாகவில்லை. ஆனால் அவளுடைய அந்தராத்மாவுக்கு ஒரு வேளை அவற்றின் பொருள் தெரிந்திருக்கலாம்.

ஒரு விஷயம் நிச்சயம், கிட்டாவய்யரின் வீடு நோக்கிச் சீதா சென்று கொண்டிருந்தபோது வான வெளியில் தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் நின்று அவள் மீது மணம் மிகுந்த நறுமலர்களைத் தூவினார்கள். தேவலோகத்து இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு அமர கன்னியர் இன்ப கீதங்களைப் பாடினார்கள். அந்தக் கீதங்களுக்கும் இணங்க ஆனந்த நடனமாடிக்கொண்டே சீதா அவ்வீதியில் நடந்தாள், தனக்கு என்ன நேர்ந்துவிட்டது. ஏன் தன் உள்ளம் இவ்வளவு உற்சாகமடைந்திருக்கிறது. இது நாள் வரையில் அனுபவித்தறியாத இந்தப் பொங்கி வரும் மகிழ்ச்சியின் மூலாதாரம் எங்கே?- என்றெல்லாம் அவள் ஆராய்ந்து சிந்தனை செய்யவில்லை. உள்ளக் களிப்பும் உடம்பின் பூரிப்பும் ஒன்றாகி நினைவு அழிந்து மெய் மறந்த நிலையில் நடந்து சென்றாள். வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் ஒருவாறு பிரமை நீங்கிற்று. சரஸ்வதி அம்மாளிடம் நேரே சென்று, "மாமி! நீங்கள் கவலைப்பட வேண்டாம். லலிதாவைப் பற்றி நான் புகழ்ந்த புகழ்ச்சியில் சம்பந்திகள் அப்படியே சொக்கிப் போய் விட்டார்கள். மாப்பிள்ளை கூடக் கேட்டுக் கொண்டுதானிருந்தார். நாளைக்கு அவசியம் கலியாணம் நிச்சயம் செய்து கொண்டுதான் போவார்கள்" என்றாள்.

சரஸ்வதி அம்மாள் உள்ளம் நிறைந்த நன்றி உணர்ச்சியோடு, "உன்னுடைய சமர்த்துக்கு மற்றவர்கள் திருடப் போக வேண்டியதுதான்! வயதானவர்களுக்கெல்லாம் உன்னுடைய சமர்த்தில் ஒரு பங்கு இருக்கக்கூடாதா? வந்த மனுஷர்களை யாராவது போய் எட்டிப் பார்க்கிறார்களா பார்! எல்லாரும் இந்த வீட்டையே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். சீமாச்சு மாமா என்ன சொன்னார் தெரியுமா? இந்த வரன் நிச்சயமாகும் என்று அவருக்குத் தோன்றவில்லையாம்! இவரை யார் கேட்டார்கள்? ஏதாவது, 'அபிஷ்டு' என்று சொல்லி வைப்பதே சிலருக்குத் தொழில்!" என்று கூறினாள்.