சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/வைஜயந்தி

விக்கிமூலம் இலிருந்து
31. வைஜயந்தி

வழித் துணையாகக் கிடைத்த இந்த வீரன் எந்த மயூரசன்மனைப்பற்றிக் கூறி வந்தானோ அதே மயூரசன்மனைக் குறித்து ஏற்கெனவே புத்த பிக்ஷு கூறியிருந்தது பரஞ்சோதியின் ஞாபகத்தில் இருந்தது. ஆனால், அவர் கூறிய வரலாறு இவ்வளவு ரஸமாக இல்லை. அந்த வரலாற்றை அவர் கூறியதன் நோக்கமும் பரஞ்சோதிக்குப் பிடிக்கவில்லை. "அந்த மயூரசன்மனைப் போல் ஒரு வேளை நீயும் ஆனாலும் ஆகலாம்!" என்று புத்த பிக்ஷு கூறியது பரஞ்சோதியின் உள்ளத்தில் அருவருப்பைத்தான் உண்டு பண்ணிற்று. ஏன்? மயூரசன்மன் பேரிலேயே அவனுக்கு அருவருப்பு உண்டாக அது காரணமாக இருந்தது.

ஆனால், இப்போது மயூரசன்மன் செய்த வீரப் போரையும் உடம்பில் முப்பத்தாறு காயங்களுடன் அவன் பல்லவ மன்னனின் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டதையும் அறிந்ததும், அவன் மீது பரஞ்சோதியின் மரியாதை பன்மடங்கு வளர்ந்தது. "அப்பேர்ப்பட்ட வீரன் பல்லவ மன்னனுக்குச் சரணாகதி அடைய மறுத்துத்தான் இருப்பான். அரசனுக்கு எதிராகக் கலகம் செய்பவர்களைப் பூமியில் புதைத்து யானையின் காலால் இடறச் செய்வதுதானே வழக்கம்! பல்லவ ராஜாவும் அப்படிச் செய்து விட்டாராக்கும்!" என்று பரஞ்சோதி மனக்கசப்புடன் கூறினான்.

"இல்லை, தம்பி, இல்லை! சாதாரணமாய் அங்க, வங்க, கலிங்க, காஷ்மீர, காம்போஜ தேசங்களின் ராஜாக்களாயிருந்தால் அப்படித்தான் செய்திருப்பார்கள். ஆனால் காஞ்சி பல்லவ மன்னர்களின் காரியங்கள் ஒரு தனிப் போக்காக இருக்கும்.." "பல்லவ மன்னர் என்ன செய்தார்?" "மயூரசன்மனை மன்னித்ததோடு, அவனுடைய வீரத்தை மெச்சி அவன் ஸ்தாபித்த ராஜ்யத்தை அவனுக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். அவரே நேரில் சென்று மயூரசன்மனுக்கு முடிசூட்டி விட்டு வந்தார்!" "அப்படியா?" என்று பரஞ்சோதி தன் உண்மையான வியப்பைத் தெரிவித்துவிட்டு, "அதைக் குறித்து மயூரசன்மன் நன்றி பாராட்டினானா?" என்று கேட்டான்.

"மயூரசன்மன் மட்டுமில்லை அவன் ஸ்தாபித்த கதம்ப வம்சத்தில் பிறந்தவர்கள் எல்லாரும் சென்ற இருநூறு வருஷத்துக்கு மேலாகப் பல்லவர்களுக்குக் கப்பம் செலுத்திக் கொண்டு நன்றியுடன் இருந்து வந்தார்கள். கிருஷ்ணை - துங்கபத்திரை நதிக்கரை ஓரமாய் அவர்களுடைய இராஜ்யமும் பெருகி வந்தது. கொஞ்ச காலத்துக்குப் பிறகு வைஜயந்தி பட்டணத்தில் தங்கள் தலைநகரை ஸ்தாபித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு ஆபத்து நேர்ந்த சமயங்களில் பல்லவ மன்னர்களும் வேண்டிய உதவி புரிந்து வந்தார்கள். இருபது வருஷத்துக்கு முந்தி புலிகேசியின் சிற்றப்பன் மங்களேசன் கதம்ப ராஜ்யத்தின் மீது படையெடுத்த செய்தி தெரியுமோ இல்லையோ?" "தெரியாதே? அது என்ன விஷயம்?" என்று பரஞ்சோதி ஆவலுடன் கேட்டான்.

"ஆமாம்; நீ சிறுபிள்ளை உனக்கு எப்படி அது தெரிந்திருக்கும்? இப்போது ராட்சஸ ஸ்வரூபம் கொண்டு பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்து வருகிறானே, இந்தப் புலிகேசியும் இவனுடைய தம்பிமார்களும் சிறு பிள்ளைகளாக இருந்தபோது, இவர்களுடைய சிற்றப்பன் மங்களேசன் என்பவன் வாதாபி ராஜ்யத்தை ஆண்டு வந்தான். அவனுக்குத் திடீரென்று அயல் நாடுகளைக் கைப்பற்றிப் பெரிய சக்கரவர்த்தி ஆகவேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. துங்கபத்திரையைக் கடந்து கதம்ப ராஜ்யத்துக்குள் பிரவேசித்தான். வைஜயந்தி நகரம் வரையில் வந்து அந்த நகரத்தை முற்றுகை போட்டுவிட்டான். அப்போது வடக்கு மண்டலத்துப் பல்லவ சைனியந்தான் கதம்ப ராஜாவின் ஒத்தாசைக்குச் சென்றது. வைஜயந்தி பட்டணத்துக்கு அண்மையில் பெரிய யுத்தம் நடந்தது.." "யுத்தத்தின் முடிவு என்ன ஆயிற்று?"

"கேட்பானேன்! வீர பல்லவ சைனியந்தான் ஜயித்தது. சளுக்கர்கள் தோற்றுப் பின்வாங்கி ஓடினார்கள். ஆஹா! அப்போது மட்டும் அந்தச் சளுக்கர் படையைப் பல்லவ சைனியமும் பின் தொடர்ந்துபோய் அடியோடு நிர்மூலம் செய்திருந்தால், இப்போது இந்த யுத்தமே வந்திருக்காது!" என்றான் அவ்வீரன். அந்தப் பழைய வரலாறுகளையெல்லாம் அறிந்து கொள்ளுவதில் பரஞ்சோதிக்கு ரொம்பவும் சுவாரஸ்யமாயிருந்தது. யுத்தங்களைப் பற்றியும் அவை நடந்த முறைகளைப் பற்றியும் வெற்றி தோல்விகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள அவனுக்கு மிகவும் ஆவலாயிருந்தது. நிலா இல்லாத முன்னிரவில் வழிப்பிரயாணத்தின் அலுப்புத் தெரியாமலிருப்பதற்கும் அது ஏதுவாயிற்று.

"தோல்வியடைந்து ஓடிய சளுக்க சைனியத்தைப் பல்லவ சைனியம் ஏன் தொடர்ந்து போகவில்லை?" என்று அவன் கேட்டான். "அதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம் என்னவென்றால், வைஜயந்தி பட்டணத்துக்கு அருகில் நடந்த யுத்தத்தில் பல்லவ சைனியம் ஒரு பெரிய நஷ்டத்தை அடைந்தது. பல்லவ சேனாதிபதி அந்தப் போரில் உயிர் துறந்தார்!" பரஞ்சோதியின் நினைவு சட்டென்று வேறு பக்கம் திரும்பியது.

"ஐயா! அந்த வீர பல்லவ சேனாதிபதியின் பெயர் என்ன?" என்று அவன் கேட்டான். "நீ கேள்விப்பட்டதில்லையா? சேனாதிபதி கலிப்பகைதான் இப்போதுள்ள கலிப்பகையாரின் மாமன்..." "கேள்விப்பட்டிருக்கின்றேன், அந்த வீர புருஷரை மணம் செய்து கொள்வதாக இருந்த திலகவதியாரைப் பற்றியும் கேட்டிருக்கிறேன்" என்று பரஞ்சோதி பக்தி பரவசத்துடன் கூறினான். "உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே! நீ பெரிய சைவன் போலிருக்கிறதே!" என்றான் அவ்வீரன்.

"ஆம், ஐயா! என் உற்றார், உறவினர் எல்லாரும் சைவர்கள். திருநாவுக்கரசு அடிகளைத் தரிசிப்பதற்கென்றே நான் கிளம்பிக் காஞ்சிக்கு வந்தேன்..." என்று கூறிப் பரஞ்சோதி சட்டென்று நிறுத்தினான். "அப்படியா, தம்பி! நானும் சைவன்தான் திருநாவுக்கரசரை நீ காஞ்சியில் தரிசிக்கவில்லையா?" "இல்லை!" "ஏன்?" "அதற்குள் இந்த வேலை வந்து விட்டது." "எந்த வேலை?"

பரஞ்சோதி சற்று நிதானித்து, "ஐயா! என்னுடைய வேலை என்ன என்பது பற்றி நீங்கள் ஒன்றும் கேட்காவிட்டால், நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் ஏற்படாது!" என்றான். "ஆஹா! நீ வெகு புத்திசாலிப் பிள்ளை!" என்றான் அவ்வீரன். பிறகு சொன்னான், "தம்பி! உன் மாதிரியே எனக்கு ஒரு புதல்வன் இருக்கிறான். உன் வயதேதான் அவனுக்கும் இந்தப் பிரயாணத்தில் என்னோடு தானும் வர வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தான். நான் கூடாது என்று தடுத்துவிட்டேன். அதனால் அவனுக்கு என் பேரில் கோபம்.."

இப்படிப்பட்ட ஒரு வீரத் தந்தையைப் பெற்ற அதிர்ஷ்டசாலியைக் குறித்துப் பரஞ்சோதியின் மனத்தில் சிறிது பொறாமை உண்டாயிற்று. அந்தத் தகாத எண்ணத்தைப் பரஞ்சோதி மறக்க முயன்றவனாய், "ஐயா! வைஜயந்தி யுத்தத்தைப் பற்றி கூறி இடையில் நிறுத்திவிட்டீர்களே! அந்தப் போரில் சேனாதிபதி கலிப்பகை உயிர் துறந்ததாகச் சொன்னீர்கள். ஆனால், பல்லவ சைனியத்துக்கு வேறு சேனாதிபதி கிடைக்கவில்லையா? தோற்று ஓடிய சளுக்கர்களைத் தொடர்ந்து பல்லவ சைனியம் ஏன் போகவில்லை?" என்று கேட்டான். "விசித்திரசித்தர் என்று பட்டப்பெயர் பெற்ற காஞ்சி சக்கரவர்த்தியை நீ பார்த்திருக்கிறாயா, தம்பி?" என்று பொருத்தமில்லாமல் கேட்டான் அவ்வீரன். பரஞ்சோதி மௌனம் சாதித்தான். அவனுடைய மௌனத்தைப் பாராட்டி அவ்வீரன் தலையை ஆட்டிவிட்டு மேலே சொல்லுகிறான்.

"விசித்திரசித்தர் அந்தக் காலத்தில் மிகமிக விசித்திரமான எண்ணங்களைக் கொண்டிருந்தார். உலகத்தில் யுத்தம் என்பதே கூடாது. பகைமையும் துவேஷமும் இருக்கக் கூடாது. எல்லா ஜனங்களும் சிற்பம் முதலிய கலைகளில் ஈடுபட்டு ஆடல் பாடல்களில் ஆனந்தமாய்க் காலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் அவர் மனத்தில் குடிகொண்டிருந்தன. நமக்கு இருக்கிற இராஜ்யம் போதும் அதிகம் என்னத்திற்கு என்ற வைராக்கியத்தையும் கொண்டிருந்தார். அப்பேர்ப்பட்ட சமயத்தில் புலிகேசியினிடமிருந்து சமாதானக் கோரிக்கையும் கிடைக்கவே, யுத்தத்தை நிறுத்தும்படி கட்டளை போட்டு விட்டார்." "புலிகேசி எப்போது அரசன் ஆனான்?"

"சிற்றப்பன் மங்களேசன், ராஜ்யத்தின் மேலுள்ள ஆசையினால், புலிகேசியையும் அவன் தம்பிகளையும் சிறையில் போட்டிருந்தான். மங்களேசன் வைஜயந்தியின் மேல் படையெடுத்தபோது புலிகேசியும் அவன் தம்பிமார்களும் சிறையிலிருந்து தப்பி வௌியே வந்து விட்டார்கள். தோல்வியடைந்து திரும்பிய மங்களேசனைக் கொன்று விட்டு வாதாபி மன்னனாகப் புலிகேசி முடி சூட்டிக்கொண்டான். உடனே காஞ்சிச் சக்கரவர்த்திக்குச் சமாதானத் தூது அனுப்பினான். நாகசர்ப்பத்துடன் சமாதானம் செய்து கொண்டதுபோல் அந்தப் பாதகனுடன் மகேந்திர சக்கரவர்த்தியும் அப்போது சமாதானம் செய்து கொண்டார். அதனுடைய விபரீதப் பலனை இப்போது அனுபவிக்கிறார்." "என்ன விபரீதப் பலன்?"

"விபரீதப் பலன் என்னவா? புலிகேசியின் சைனியங்கள் இந்த யுத்தத்தில் வைஜயந்தியைக் கைப்பற்றிக் கொண்டு மேலேறி வருகின்றன என்று உனக்குத் தெரியாதா? இன்னொரு பயங்கரமான செய்தி கேள்விப்படுகிறேன். வைஜயந்தி பட்டணத்தைக் கைப்பற்றியவுடனே, புலிகேசி அந்த நகரிலிருந்த செல்வங்களையெல்லாம் கொள்ளையடித்து, நகரையே கொளுத்தும்படியாகக் கட்டளையிட்டான் என்று தெரிகிறது. இதை என்னால் நம்பவே முடியவில்லை ஒருவேளை உண்மையாயிருந்தால்?.." "இருந்தால்..?" "உண்மையாயிருந்தால், 'காஞ்சி மகேந்திரவர்மருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்,' என்றுதான் சொல்லுவேன். உலகத்தில் ராஜாக்களும் சக்கரவர்த்திகளும் 'போரிலே புலி' என்றும், 'சண்டையிலே சிங்கம்' என்றும் பட்டப்பெயர் வாங்குவார்கள். காஞ்சி சக்கரவர்த்தி 'சித்திரகாரப் புலி' என்று பட்டம் பெற்றிருக்கிறார் அல்லவா? அவருக்கு இதெல்லாம் வேண்டியதுதானே!"

பரஞ்சோதி மீண்டும் மௌனத்தில் ஆழ்ந்தான். வைஜயந்தி பட்டணம் எரிக்கப்பட்ட செய்தி அவன் மனத்தைக் கலக்கியிருந்தது. சற்றுப் பொறுத்து அவ்வீரன், "தம்பி! எங்கே போகிறாய், என்ன காரியமாகப் போகிறாய் என்று உன்னை நான் கேட்கவில்லை. ஆனால், இன்று ராத்திரி எங்கே தங்குவதாக உத்தேசம் என்று சொல்லுவதில் உனக்கு ஆட்சேபம் ஒன்றும் இராதே?" என்றான். "இந்த மலையைத் தாண்டியதும் அப்பால் ஒரு மகேந்திர விடுதி இருப்பதாகச் சொன்னார்கள். அதில் தங்கலாமென்று எண்ணியிருந்தேன். இருட்டுவதற்கு முன்னால் மகேந்திர விடுதிக்குப் போய்ச் சேர்ந்து விடலாமென்று நினைத்தேன்." "ஆ! அதோ பார் வௌிச்சத்தை! நீ சொன்ன மகேந்திர விடுதி அந்த வௌிச்சம் தெரிகிற வீடுதான். நானும் இன்றிரவு அங்கேதான் தங்கப் போகிறேன்" என்றான் அவ்வீரன்.