பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

29

வண்ணமிருந்த அவள் அவன் வரப் போகிறான்’ என்றெண்ணித் தானும் வழியை விட்டு ஒதுங்கினாள். கடைசியில் இரண்டு பேருமே போகவில்லை. வழி காலியாக இருந்தது. ஒருவர் மற்றொருவருக்கு வழிவிட வேண்டுமென்று ஒதுங்க, மற்றொரு வரும் அதே கருத்துடன் ஒதுங்கி விட்டால் அப்புறம் வழி வெறுமனே இருக்க வேண்டிய தானே? ‘நாம் வழிவிட்டோம்! அவள் போகவில்லை. அவளும் ஒதுங்கிக் கொண்டாள். நாம்தான் முன்னால்போய் விடுவோமே’ என்று அவன் முன் வந்தான்! அதே தீர்மானத்துடன் அவளும் முன்வந்தாள்!. இரண்டு பேரும் மிகவும் நெருங்கி விட்டனர். முட்டிக் கொள்ளாத குறைதான். பின்னால் எப்பொழுதும் முட்டிக்கொள்ளும் தம்பதிகளாக ஆகப்போகும் அவர்களுக்கு அப்போது நெருங்கவே நாணம். கடைசியில் ஒரு வழியாக விலகி ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளாமல் நிலைப்படியைக் கடந்து போய்ச் சேர்ந்தனர். பாட்டில் சிருங்கார ரசத்தின் ஒளி, பட்டை தீட்டிய வைரம் போல மின்னுகின்றது.

"புதுமணத்த காதலனும் பூவையும்புன் வாயில்
எதிருற்று நாண்தமர்கண்டு எய்திக்-கதுமென்று
ஒருவர்க்கொருவர் வழிவிடப்பல் காற்பின்
இருவரும் போய் மீள்வர் எதிர்”

பூவை = காதலி, புள்வாயில் = சிறியவாயில்,தமர் = நம்மவர், எதிர் = நேருக்கு நேர்.

காட்சி, மானசீக உருவிற் கண்முன்னே தோற்றுவது போன்ற சித்திரத் தன்மையை இதிற் காண்கின்றோம். வழி விடுவதும் விலகுவதுமாகத் தங்களை அறியாமல் நாணத்தாலும் வெட்கத்தாலும் அவர்கள் விளையாடும் இந்தக் காதல் விளையாட்டைப் பாடிய கவி, சிருங்கார ரசத்தில் கை தேர்ந்தவன் போலும். எதைச் செய்துவிடக் கூடாது என்று அவர்கள் நாணி ஒதுங்குகிறார்களோ அந்த ‘மோதல்’ இயற்கையாக எதிர்பாராத வகையில் நடந்தேவிடுகிறது!