பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரமஞ்சரி இலம்பகம்161



காமன் கோயிலுக்கு முதியவர்கள் யாரும் செல்வதில்லை. பொதுவாகக் கன்னிப் பெண்கள்தான் அங்குச் சென்று வழிபடுவது வழக்கம்; அதற்காகவே அங்கு இளைஞர்கள் செல்வர்; தின்பண்டம் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு சுற்றிக்கொண்டு நிற்பர்; இவளைப் பார்க்க வேண்டுமென்று கூட்டம் கூடிவிட்டது. கட்டியங்காரன் காவலர்களுக்கு அந்தக் கூட்டத்தைச் சமாளிப்பது அரும்பாடு ஆகிவிட்டது.

சுரமஞ்சரி வழிபட்ட கோயில் என்று அதற்கு இப்பொழுதும் கதை வழங்கப்படுகிறது. கலியாணமாகாத பெண்கள் அங்குச் சென்று ஆசை மரம் சுற்றிக் கல்லில் கயிறு கட்டித் தொங்கவிட்டு வருகிறார்கள். இப்பொழுதும் ஆண்கள் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை என்று சொல்கிறார்கள்.

பலத்த பாதுகாப்போடு அவள் உள்ளே சென்றாள்; அவள் நேருக்குநேர் மோதிக் கொண்டாள்; இடைத்தரகர் யாரும் இல்லை; அர்ச்சகர்கள் அந்தக் கோயிலில் அனுமதிக்கப்படுவதில்லை; ஏனெனில் பக்தர்கள் இறைவனிடம் வாய்விட்டு முறையிட முடிவதில்லை.

“காமனே! என் உயிருக்கு ஏமம் ஆகிய சீவகனைக் கொண்டு வந்து நிறுத்து; உனக்கு இங்கே பொன்னினால் ஆகிய தேரையும் கரும்பு வில்லுக்கு இரும்புப் பூணையும் செய்து தருகிறேன்; அம்மா ரதியே நீயாவது சீமான் காமனிடம் என் குறையைச் சொல்லக் கூடாதா?” என்று முறையிட்டாள்.

ஒரு குரல் எழுந்தது.

“பெண்ணே நீ கண்ணை மூடிக்கொண்டு போ; உன் எதிரே அவனே வந்து முட்டிக் கொள்வான்” என்று குரல் எழுந்தது.

தெய்வம் பேசியது.