பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

105



பேசிய மக்களே, ஒரு மூலைக்கு ஒரு மூலை அம்மொழியினைப் பலவிதமாக இழுத்தும், விழுங்கியும், நீட்டியும், குறுக்கியும், மாற்றியும், திருத்தியும் பேசி வந்தனர். இதனால் ஒரே மொழி பலவகை மாறுபாடு அடைய இடமுண்டல்லவா?

அது மட்டுமன்று; ஆங்காங்கு வந்து குடியேறிக் கூடி வாழ்ந்த பிற மொழியாளர்களின் வீதத்திற்கு ஏற்ப, கூடுதல் குறைச்சலாக, மூலைக்கு மூலை பிறமொழிக் கலப்பு ஏற்பட்டதாலும், ஒரே மொழி பல மாறுபாடு அடைய நேரிட்டது.

இங்கனம் நாளடைவில் ஒரு மொழியினர்க்குள்ளேயே, இம் மூலையில் வாழ்ந்தவர் பேசியது ஒரு விதமாகவும் அம் மூலையில் வாழ்ந்தவர் பேசியது வேறு விதமாகவும் இருந்ததால், இது ஒரு மொழியாகவும், அது வேறொரு மொழி போலவும் தோன்ற இடமுண்டாயிற்று.

இந்நிலையில், சூழ்நிலையின் காரணமாக, அவ்வொரு மொழி மக்களுக்குள்ளேயே மேலும் பல பிரிவினைகள் ஏற்பட்டுவிட, அவ்வவர் பேசிய பேச்சுகள் வெவ்வேறு பெயர்களுடன் வெவ்வேறு மொழிகளாகப் பிரிந்து விட்டன.

இவ்விதம் பிரிந்தவைகளே தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்னும் மொழிகள் எனலாம். இவற்றுள் ஒவ்வொன்றும் வடமொழிக் கலப்பின் விகிதத்தால் மாறுபடும். இவற்றுள் மிகவும் குறைந்த கலப்புடையது தமிழ்தான். கலக்காமலேயே எழுதவும் பேசவும் வேண்டிய சொற்கள் தமிழிலேயே உள்ளன. மற்ற மொழிகள் தம்மிடம் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கிக் கொள்ளு . மாயின், மீண்டும் ஒன்றுபட்ட மொழிகளாகத் தோன்றலாம். இக்கருத்தை மெய்ப்பிப்பதற்காக, நான்கிலும் ஒத்துள்ள சில சொற்கள் கீழே தரப்படுகின்றன. ஊன்றி நோக்கின் உண்மை புலனாகும்: