பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்மகள் இலம்பகம்167



அதில் சிறப்பான சித்திரமாக யானையைச் சீவகன் அடக்கி அவளைக் காத்தது இருந்தது. அதை வீட்டு முகப்பில் பெரிதாக்கி மாட்டி வைத்திருந்தாள். இதுதான் நான் எழுதும் உங்கள் கதைக்கு முகப்பு அட்டை என்றாள்.

கற்பனை மிக்க அவ்வோவியம் ஒப்பனை மிக்கதாக இருந்தது; நூலுக்கே முகப்பு ஓவியம்தான் அழகு தருவது என்று பாராட்டினான்.

அவளிடம் விடை பெற்று அவளை அட்டில் களத்துக்கு அனுப்பிவிட்டுத் தத்தையின் கட்டில் அறைக்கு வந்தான்.

“துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து வலிமை கூட்டினாய். அந்த இன்ப இசையில்தான் திக்கு விசயம் செய்து பக்கத் துணைகளைச் சேர்த்தேன்” என்றான்.

“இனிமேல்தான் உம் கடமை இருக்கிறது. கட்டியங் காரனை ஒழித்து வாகை சூட வேண்டும்” என்றாள்.

அவன் சுற்றுப் பயணத்தில் சுக அனுபவங்களைப் பேசாமல் ஏனையவற்றை மட்டும் எடுத்துக் கூறினான். மற்றும் நெருக்கமானவரிடம் ஒன்று இரண்டு உரையாடி அவர்களை மகிழ்வித்தான். இவனை எடுத்து வளர்த்த செவிலியர் அவர்கள் குடும்ப நலனைக் கேட்டு அறிந்தான்.

அவன் தோழர்களோடு சின்ன வயதில் சுற்றி விளையாடிய ஆலமரத்தைச் சென்று பார்த்து விட்டு வந்தான்; படித்த பள்ளியிடம் பாசம் காட்டுவதுபோல அது இருந்தது.

அதன்பின் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தன் தோழருடன் பயணத்தைத் தொடர்ந்தான். மாமன் கோவிந்தனைக் காண்பதற்கு விதேய நாட்டுக்குச் சென்றான்.