பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தமிழ் நாடும் மொழியும்


“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத் துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார் ”- இது நச்சினார்க்கினியர் அகத்துக்குக் கூறும் இலக்கணமாகும். இவ்வகப்பொருளினை, கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என ஏழ் திணைகளாக ஆசிரியர் பிரித்துள்ளார். திணை என்பது ஒழுக்கம். இவற்றுள் கைக்கிளை என்பது ஒருதலைக் காமமாகும். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் ஆகும். எஞ்சிய ஐந்து திணைகளும் மிகச் சிறப்புடையனவாகும். ஐந்திணை என்பது அன்புடைக் காமம் ஆகும். இதற்குரிய முதற்பொருள் நிலமும் பொழுதும் ஆகும். புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் என்பன உரிப் பொருள்களாகும். தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, ஊர், நீர், விலங்கு, மரம், பூ, புள், தொழில் என்ற பதினான்கும் கருப்பொருள் எனப்படும்.

முன்னர்க் கூறியது போன்று நிலம் குறிஞ்சி முதலிய ஐந்துமே. பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும். ஆவணி மாதந் தொடங்கிக் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என பெரும் பொழுதினை ஆறு வகையாகப் பிரித்தனர். இவ்வாறே நாளினை ஆறு கூறாகப் பிரித்து ஒவ்வொரு கூறுக்குமுரிய பத்து நாளிகை நேரத்திற்கும் ஞாயிறு தோன்றும் வேளை முதலாகத் தொடங்கிக் காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என சிறுபொழுதையும் ஆறாகப் பகுத்தனர்.

அகவொழுக்கம் களவு, கற்பு என இருவகைப்படும். அவற்றுள் களவு என்பது ஒத்த தலைவனும் தலைவியும்