பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 285 தீயவர்களது உலகம், தயங்காமல் தீமைகளையே செய்யும் என்பதை, பயத்தல் என்கின்றார். பயத்தல் என்றால் படைத்தல் என்றும், பிறப்பித்தல் என்றும் பொருளாகும். பிறப்பிக்கும் வேலை இயல்பாகவும் நடக்கும். திட்டமிட்டும் நடக்கும். சூழ்ச்சிமிக்க வஞ்சகர்கள், பிறரது துன்பங்களில் தான் திருப்தி அடைகிறார்கள் என்பதைத்தான், தீய பயத்தலால் என்றார். ஆகவே, தீயவர் கூட்டத்தைப் பார்க்கிறபோது, நெஞ்சம் பதை பதைக்க அஞ்சுகின்றார்கள் மக்கள் என்பதையே, எரிகிற தீயின் பக்கம் யாருமே செல்ல மாட்டார்கள். அஞ்சி ஒடுவார்கள். தப்பித்து பிழைக்கவே ஓடுவார்கள் என்ற உலக நடையைக் குறிக்கவே, அஞ்சப்படும் என்றார். தீயின் கொடுமை காட்சிக்கு வெம்மை மட்டுமல்ல. எரித்துச் சாம்பலாக்கும் கடுமையும் உண்டு. அதுபோலவே தீயோராகிய இழிஞர்கள் காட்சிக்குக் கருமையும், செயலுக்கு அழிவுத் தன்மையும் உள்ளவர்கள் என்று வள்ளுவர் 2 வது குறளில் தீய உலகத்தையும், தீய கூட்டத்தையும் சுவையாக குறித்துக் காட்டியிருக்கிறார். 203. அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். பொருள் விளக்கம்: செறுவார்க்கும் = கொலை முதலிய தீச்செயல்களைச் செய்கிற பகைவர்க்கும் தீயவிடல் = தீமையான குற்றங்களை செய்யா = செய்யாமல் விடுமாறு (அவர்களுக்குத்) அறிவினுள் = தெளிவுண்டாகுமாறு போதிக்கின்ற ஞானமே எல்லாம் தலை என்ப = எல்லா ஞானத்திற்கும் சிகரமாக அமைகிறது என்பார்கள் சான்றோர்கள். சொல் விளக்கம்: அறிவு = போதனை, ஞானம், தெளிவு, அறிதல். செறுவார் = பகைவர், செறுவு = கொலை விடல் = குற்றம், விடுதல், நீக்குதல் தாங்குதல்.