பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா முற்கால உரை: தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதல், அறிவுகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவென்று நல்லோர் சொல்லுவர். தற்கால உரை: தீமை செய்யத் துணிந்த பகைவர்க்கும், மாறி, அத்தீமையைச் செய்யாது விடுதல், அறிவுகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று ஆய்ந்தோர் கூறுவர். புதிய உரை: கொலை செய்யவும் தயங்காத பகைவராகிய தீயோர், தமது குற்றங்களைச் செய்யாமல் விட்டுவிட, அவர்க்குத் தெளிவுண்டாகுமாறு போதிக்கின்ற ஞானமே, எல்லா ஞானத்திற்கும் சிகரமாக அமையும். விளக்கம்: தமக்குத் தீங்கு செய்வார்க்கும் தீமை செய்யாமல் விடுதல் என்பது பெரியோர்க்கு அழகு என்பார்கள். இன்னா செய்தவர்களுக்கும் இனியவே செய்யாத போது, என்ன பயத்ததோ சால்பு என்று பாடிய வள்ளுவர், இந்தக் குறளில், ஒரு படி மேலே போய், மனித மனத்தைப் புனிதத் தனமாக வளர்த்துக் கொள்கிற விதத்தில் பாடியுள்ளார். தீய வினையாளன், என்று ஒர் குறளில் கூறிய வள்ளுவர், மூன்றாவது குறளில், செறுவார் என்கிறார். செறுவு என்றால் கொலை என்று ஒரு பொருள். செறுவார் என்றால் கொலை புரியும் பகைவர். ஆகவே, எந்தக் கொடுஞ் செயலுக்கும் அஞ்சாத ஒருவர் மனித குலத்திற்கே பகைவர்தானே! - அந்தப் பகையாளியின் மனம் மாறி, செய்கிற குற்றங்களைச் செய்யாமல் விடச் செய்திட வேண்டும் என்று விரும்பிய வள்ளுவர், விடல் செய்யா என்றார். விடல் என்றால் குற்றம். குற்றமே செய்யாமல், அந்தப் பகைவராய்ப் போன இழிஞர்களை, மீட்டுக் கொண்டுவர முயற்சிக்கும் அறிவே, போதிக்கும் அறிவே, தெளிவுபடுத்தும் அறிவே, தலையாய ஞானம் என்கிறார். ஒருவன் பொறிகள் மூலம் உணர்வது எல்லாம் உணர்வு ஆகிறது. உணர்வுகள் மிகுதியாகி வரவர, உணர்வு அறிந்து கொள்கிற அறிவாகிறது. அறிவும் விரிய விரியத் தெளிவாகிறது.