பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 281 சேர்ந்தாரைக் கொல்லி என்று சிறப்புப் பொருளே இருக்கும்போது, அச்சம் என்ற சொல்லையும் ஏன் வள்ளுவர் சேர்த்துச் சொன்னார்? அச்சம் என்றால், பயன், கவலை, கலக்கம், துன்பம் என்று அர்த்தங்கள் உண்டு. ஆகவே தான் எல்லா உரையாசிரியர்களும், தீய செயல்களைச் செய்ய அஞ்சுதல் பாவங்களாயின செய்தற்கு அஞ்சுதல் என்றே பொருள் கூறி வைத்திருக்கின்றனர். பொருள் பொருத்தமானது என்றாலும், மேலும் நாம் சிந்திக் கிறபோது, சிறப்பான பொருள் கிடைக்கிறபோது மகிழ்ச்சிதானே. அச்சம் என்ற சொல்லுக்கு அடுப்பு என்றொரு பொருளும் உண்டு. அடுப்பு என்றால் நெருப்பின் இருக்கை என்ற அர்த்தத்தைத் தருகிறது. தீயென்றால் நெருப்பு என்றும், வினை என்றால் விளைவுகளைத் தொடர்ந்து தரும் காரியம் என்றும் பொருள் கிடைக்கிறபோது, அச்சம் என்ற சொல் இங்கே, நெருப்பு வினைகளின் இருக்கை என்ற சுவையான உணர்வு தோன்றுகிறதல்லவா! தீயானது, கொண்டதையும் கொள்வதையும் மட்டுமல்ல, கண்டதையும் எரித்துத் தொலைத்து விடும். அதாவது தீயானது பட்டதை அழித்துத் தானும் அழியும். அந்தத் தீபோல, தீமையின் வீரியத்தைக்கூறி, மனமானது நெருப்பின் இருக்கையாக இருக்கக்கூடாது. உடலானது நெருப்பின் எரிப்பாக மாறிவிடக் கூடாது. ஆன்மாவானது வெப்பத்தின் விளை நிலமாக விளங்கக்கூடாது என்பதற்காக, வள்ளுவர் தீவினை அச்சம் என்றார். தீய காரியங்கள் நெருப்பின் இருப்பாக இருக்கின்றன. அவை செய்வாரையும், சேர்ந்தாரையும், விழுந்தாரையும் அழித்து விடுகின்றன. ஆகவே, பயனில பேசுவான் பட்டொழிந்து போவான் என்பது போலவே, தீ வினையன், தீய்ந்து போவான் என்று குறிக்கவே, பயனில சொல்லாமைக்குப் பின் வரும் அதிகாரமாக தீவினை அச்சத்தை வைத்துள்ளார்.