பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 280. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். பொருள் விளக்கம்: மழித்தலும் மற்றவரது வாழ்க்கையை அழித்தலும் நீட்டலும் - பெருங்கொடை கொடுத்துக் காத்தலும் போன்றவற்றை வேண்டா = ஒருவரால் விரும்பிச் செய்யவே வேண்டாம். உலகம் - பேரறிவு பெற்ற பெரியோர்கள் பழித்தது - பாவம் என்று பழித்து ஒதுக்கியதை ஒழித்துவிடின் - தவிர்த்து விலக்கினாலே போதுமானது சொல் விளக்கம்: மழித்தல் = அழித்தல்; நீட்டல் = பெருங்கொடை, ஈதல் உலகம் = அறிஞர்கள்; பழித்தது - பாவம் என்றது. முற்கால உரை: தவம் செய்வார்க்குத் தலை மயிரை மழித்தலும், சடை ஆக்கலு மாகிய வேடமும் வேண்டா. உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றங் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின் போதுமானது. தற்கால உரை: உயர்ந்தோர் பழிக்கும் தீய ஒழுக்கத்தை நீக்கி விட்டால் துறவோர் தம் தலையை மொட்டையடித்துக் கொள்வதும்: முடியை வளர்த்து நீட்டிக் கொள்வதும் ஆகிய வேடங்கள் வேண்டியன அல்ல. புதிய உரை: தவ நெறியில் இருப்பவர்கள், மற்றவர்களுக்குப் பெருங்கொடை அளிக்கவும் வேண்டாம். பிறர் வாழ்வை அழிக்கவும் வேண்டாம் . உலகப்பெருமக்கள் பழித்து வெறுத்த பாவத்தையெல்லாம் தவிர்த்து வாழ்ந்தாலே போதுமானது. விளக்கம்: கூடாஒழுக்கத்தை இதுவரையிலும் கூறி வந்த வள்ளுவர். கூடும் ஒழுக்கத்தைப் பத்தாவது குறளில் பாங்காகச் சொல்லுகிறார்.