திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 27 முதல் 28 வரை

விக்கிமூலம் இலிருந்து
யூதா மன்னர்கள் உசியா, யோத்தாம், அமசியா. ஓவியர்: மைக்கலாஞ்சலோ. உருவாக்கிய ஆண்டு: 1511-1512; வத்திக்கான் நகரம்.

2 குறிப்பேடு (The Second Book of Chronicles)[தொகு]

அதிகாரங்கள் 27 முதல் 28 வரை

அதிகாரம் 27[தொகு]

யூதாவின் அரசன் யோத்தாம்[தொகு]

(2 அர 15:32-38)


1 யோத்தாம் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். சாதோக்கின் மகள் எரூசா என்பவளே அவன் தாய்.
2 தன் தந்தை உசியாவைப்போல் அவன் ஆண்டவரின் பார்வையில் நேரியன செய்து வந்தான்; அவனைப்போலன்றி ஆண்டவரின் இல்லத்தில் நுழையவில்லை. மக்களோ தொடர்ந்து தீய வழியில் நடந்தனர்.


3 அவன் ஆண்டவரது இல்லத்தின் உயர் வாயிலைக் கட்டியதுடன், ஒபேலின் மதில்களைப் பெரிதாகக் கட்டினான்.
4 அவன் யூதாவின் மலைகளில் நகர்களையும், காடுகளில் கோட்டைகளையும் கொத்தளங்களையும் கட்டினான்.
5 அவன் அம்மோனியரின் மன்னனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றான். அந்த ஆண்டில் அம்மோனியர் அவனுக்கு நாலாயிரம் கிலோகிராம் [1] வெள்ளியும், பத்தாயிரம் கலம் கோதுமையும், பத்தாயிரம் கலம் [2] வாற்கோதுமையும் அளித்தனர். இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளிலும் அவ்வாறே அம்மோனியர் அவனுக்கு அளித்தனர்.
6 யோத்தாமின் வழிகள் அவன் கடவுளாம் ஆண்டவரின் திருமுன் நேரியனவாக இருந்தமையால், அவன் வலிமையுடையவன் ஆனான்.
7 யோத்தாமின் பிற செயல்களும், அவனுடைய எல்லாப் போர்களும், அவன் வழிமுறைகளும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.
8 அவன் அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து. பதினாறு ஆண்டுகள் எருசலேமில் அவன் ஆட்சி செய்தான்.
9 யோத்தாம் தன் மூதாதையருடன் துயில்கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் அவனுக்குப் பின் அரசனானான்.

குறிப்புகள்

[1] 27:5 'நூறு தாலந்து' என்பது எபிரேய பாடம்.
[2] 27:5 'கோர்' என்பது எபிரேய பாடம்.

அதிகாரம் 28[தொகு]

யூதாவின் அரசன் ஆகாசு[தொகு]

(2 அர 16:1-4)


1 ஆகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபது; எருசலேமில் அவன் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான்; அவன் தன் மூதாதை தாவீதைப் போலன்றி ஆண்டவரின் பார்வையில் நேர்மையானதைச் செய்யவில்லை.
2 மாறாக, அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழியில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்புச் சிலைகளைச் செய்தான்.
3 அவன் பென்இன்னோம் பள்ளத்தாக்கில் தூபம் காட்டினான்; இஸ்ரயேலரின் முன்னிலையில் ஆண்டவர் விரட்டியிருந்த வேற்றினத்தாரின் அருவருக்கத் தக்க வழக்கத்திற்கேற்பத் தன் புதல்வர்களையே தீயில் எரிக்கவும் செய்தான்.
4 தொழுகை மேடுகளிலும், குன்றுகளிலும், பசுமையான மரங்களின்கீழும் அவன் பலியிடவும் தூபமிடவும் செய்தான்.

சிரியர், இஸ்ரயேலுடன் போர்[தொகு]

(2 அர 16:5)


5 ஆதலால், ஆகாசின் கடவுளாகிய ஆண்டவர் அவனைச் சிரியாவின் மன்னன் கையில் ஒப்புவித்தார்; சிரியர் அவனை முறியடித்து, அவன் மக்களில் பெருந்திரளைச் சிறைப்பிடித்து, தமஸ்குவுக்கு இட்டுச் சென்றனர். மீண்டும் ஆகாசு இஸ்ரயேலின் அரசன் கையில் ஒப்புவிக்கப்பட்டுப் பெரும் தோல்வியுற்றான்.
6 இரமலியாவின் மகன் பெக்கா ஒரே நாளில் யூதாவின் வலிமைமிகு இலட்சத்து இருபதினாயிரம் பேரைக் கொன்றுகுவித்தான்; ஏனெனில் அவர்கள் தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரைப் புறக்கணித்தனர். [1]
7 எப்ராயிமில் வலிமைவாய்ந்த சிக்ரி, அரசனின் மகன் மாசேயாவையும் அரண்மனைத் தலைமை அலுவலர் அசிரிக்காமையும், அரசனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் எல்கானாவையும் கொன்றொழித்தான்.
8 இஸ்ரயேல் மக்கள் தங்கள் சகோதரரில் இரண்டு இலட்சம் பேரை, பெண்கள், புதல்வர், புதல்வியருடன் சிறைப்பிடித்தனர். அவர்களின் திரளான பொருள்களையும் கொள்ளையிட்டு, அவற்றைச் சமாரியாவுக்குக் கொண்டு சென்றனர்.


9 அங்கே ஓதேது என்பவர் ஆண்டவரின் இறைவாக்கினராக இருந்தார். சமாரியாவுக்குள் வந்திருந்த போர்ப்படைக்கு முன் அவர் சென்று, அவர்களை நோக்கி, "இதோ உங்கள் மூதாதையர்களின் கடவுளான ஆண்டவர் யூதாவின் மேல் சினம்கொண்டு, அவர்களை உங்களது கையில் ஒப்படைத்தார். நீங்களோ அவர்களை வெஞ்சினத்தோடு கொன்றீர்கள். அது வான்மட்டும் எட்டியுள்ளது.
10 ஆதலால் இப்பொழுது, யூதா எருசலேம் மக்களை உங்களுக்கு ஆண், பெண் அடிமைகளாகக் கீழ்ப்படுத்த வேண்டுமென்று திட்டமிடுகிறீர்கள்; ஆனால் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குமுன் நீங்களும் குற்றவாளிகள் அல்லரோ?
11 ஆதலால், இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள், ஆண்டவரின் கோபக்கனல் உங்கள்மேலும் இருப்பதால், உங்கள் சகோதரரிடமிருந்து நீங்கள் சிறைப்பிடித்து வந்தோரைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்" என்றார்.


12 எப்ராயிம் தலைவர்களில் சிலரான யோகனானின் மகன் அசரியாவும், மெசில்லமோத்தின் மகன் பெரக்கியாவும், சல்லூமின் மகன் எகிசகியாவும், இத்லாயின் மகன் அமாசாவும், படையிலிருந்து வந்தவர்களை எதிர்த்து நின்று,
13 அவர்களை நோக்கி, "சிறைக்கைதிகளை இங்கே கொண்டு வரவேண்டாம்; இல்லையெனில், ஆண்டவருக்கு எதிரான குற்றம் நம்மேல் இருக்கும். ஏற்கெனவே நம்மேல் பெரும் குற்றங்களும், இஸ்ரயேல்மேல் கோபக்கனலும் இருக்க, நம் பாவத்தையும் குற்றப்பழியையும் இன்னும் மிகுதியாக்குவது உங்கள் எண்ணமா?" என்றனர்.
14 அப்பொழுது படைக்கலன் தாங்கியோர் தலைவர்களுக்கும் சபையாருக்கும் முன்பாகச் சிறைக் கைதிகளை விடுதலை செய்து, கொள்ளைப் பொருள்களை அவர்களிடமே ஒப்படைத்தனர்.
15 சிறைக் கைதிகளின் நலனுக்கென நியமிக்கப்பட்டவர்கள், அவர்களுள் ஆடையின்றி இருந்தோர்க்குக் கொள்ளைப் பொருள்களிலிருந்து உடைகளைக் கொடுத்தனர்; அவர்களுக்கு உடைகளையும் மிதியடிகளையும் அணிவித்து, உணவும் பணமும் கொடுத்து, உடலில் பூசத் தைலமும் அளித்தனர். அவர்கள் பலிவீனமானோர் எல்லாரையும் கழுதைகள் மேல் ஏற்றினர். அனைவரையும் பேரிச்சை மர நகரான எரிகோவில் அவர்கள் சகோதரரிடம் கொண்டு போய்ச் சேர்ந்தனர். பின்னர் சமாரியா திரும்பினர்.

ஆகாசு அசீரியரின் துணை நாடல்[தொகு]

(2 அர 16:7-9)


16 பின்னர், அரசன் ஆகாசு அசீரிய அரசனுக்குத் [2] தூதனுப்பி, தனக்கு உதவும்படி வேண்டினான்.
17 ஏனெனில் மீண்டும் ஏதோமியர் வந்து யூதாவை முறியடித்துப் பலரைச் சிறைப்பிடித்துச் சென்றனர்.
18 பெலிஸ்தியர் யூதாவின் சமவெளி நகர்களுக்கும் தென்பகுதிக்கும் எதிராக எழுந்து, பெத்சமேசு, அய்யலோன், கெதெரோத்து ஆகியவற்றையும், சோக்கோவையும் அதன் சிற்றூர்களையும் திம்னாவையும் அதன் சிற்றூர்களையும், கிம்சோவையும் அதன் சிற்றூர்களையும் கைப்பற்றி அங்கே குடியேறினர்.
19 அரசன் ஆகாசு யூதாவின் ஒழுக்கத்தைச் சீர்குலைத்ததாலும், ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததாலும், ஆண்டவர் யூதாவைச் சிறுமைப்படுத்தினார்.
20 பின்னர் அசீரிய மன்னன் தில்கத்பில்னேசர் அவனுக்கு உதவி செய்யாமல் நெருக்கடியையே உண்டாக்கினான்.
21 ஆகாசு ஆண்டவரின் இல்லத்திலும், அரண்மனையிலும், தலைவர்களிடமும் இருந்த செல்வத்தை எடுத்து, அசீரிய மன்னனுக்கு அளித்திருந்தும் அதனால் ஒரு உதவியும் கிடைக்கவில்லை.

ஆகாசின் இறப்பு[தொகு]


22 இந்த அரசன் ஆகாசு தனது நெருக்கடியிலும் ஆண்டவருக்கு மேலும் துரோகம் செய்தான்.
23 தன்னைத் தோற்கடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்குப் பலி செலுத்தினான். "சிரிய மன்னர்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணைசெய்கின்றன; எனக்கும் அவை துணை செய்யுமாறு அவற்றிற்குப் பலி செலுத்துவேன்" என்று சொல்லிக்கொண்டான். ஆனால், அவனது செயல் அவனுக்கும் இஸ்ரயேலர் எல்லாருக்கும் அழிவையே தேடித் தந்தது.
24 ஆகாசு கடவுளின் இல்லத்திலிருந்த கலன்களை ஒன்று திரட்டி நொறுக்கினான். பின்னர் ஆண்டவரது இல்லத்தின் கதவுகளை மூடியபின், எருசலேமின் எல்லா மூலைகளிலும் பலிபீடங்களை எழுப்பினான்.
25 பின்பு, ஒவ்வொரு நகரிலும், யூதாவின் நகர்களில்கூட, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபமிடத் தொழுகை மேடுகளை எழுப்பினான். இது அவன் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்குச் சினமூட்டியது.


26 அவன் பிறசெயல்கள், வழி முறைகள், தொடக்கமுதல் இறுதிவரை, யூதா, இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.
27 ஆகாசு தன் மூதாதையருடன் துயில்கொள்ள, இஸ்ரயேல் அரசர்களின் கல்லறைக்கு எடுத்துச் செல்லாமல், எருசலேம் நகரில் அவனை அடக்கம் செய்தனர். அவனுடைய மகன் எசேக்கியா அவனுக்குப்பின் அரசர் ஆனார். [3]

குறிப்புகள்

[1] 28:5-6 = எசா 7:1.
[2] 28:16 எபிரேயத்தில் 'அரசர்களுக்கு' என்பது பாடம் (காண்க 2 அர 16:17).
[3] 28:27 = எசா 14:28.

(தொடர்ச்சி): குறிப்பேடு - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 29 முதல் 30 வரை