திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து
"சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்; அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்" - நீதிமொழிகள் 6:6.


நீதிமொழிகள் (The Book of Proverbs)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

கற்புநெறி தவறாமை[தொகு]


1 பிள்ளாய்!
என் ஞானத்தில் உன் கவனத்தைச் செலுத்து;
என் அறிவுரைக்குச் செவிகொடு.
2 அப்பொழுது விவேகத்துடன் நடந்துகொள்வாய்;
அறிவு உன் நாவைக் காவல்செய்யும்.
3 விலைமகளின் பேச்சில் தேன் ஒழுகும்;
அவள் உதடுகள் வெண்ணெயினும் மிருதுவானவை.
4 ஆனால் அவள் உறவின் விளைவோ எட்டியினும் கசக்கும்;
இருபுறமும் கூரான வாள் வெட்டுதலை ஒக்கும்.
5 அவள் கால் சாவை நோக்கிச் செல்லும்;
அவள் காலடி பாதாளத்திற்கு இறங்கிச் செல்லும்.
6 வாழ்வுக்குச் செல்லும் பாதையை
அவள் கவனத்தில் கொள்வதில்லை;
அவளுடைய வழிகள் மாறிகொண்டே இருக்கும்;
அதைப்பற்றி அவளுக்குக் கவலையே இல்லை.
7 ஆகையால், பிள்ளாய்! [*] எனக்குச் செவிகொடு;
நான் சொல்வதற்கேற்ப நடக்க மறவாதே.
8 அவளிடமிருந்து நெடுந்தொலையில் இருந்துகொள்;
அவள் வீட்டு வாயிற்படியை மிதியாதே.
9 இல்லையேல், பிறர் முன்னிலையில் உன் மானம் பறிபோகும்;
கொடியவர் கையில் உன் உயிரை இழப்பாய்.
10 அன்னியர் உன் சொத்தைத் தின்று கொழுப்பார்கள்;
நீ பாடுபட்டுச் சம்பாதித்தது வேறொரு குடும்பத்திற்குப் போய்ச் சேரும்.
11 நீ எலும்பும் தோலுமாய் உருக்குலைந்து போவாய்;
உன் வாழ்க்கையின் இறுதியில் கலங்கிப் புலம்புவாய்.
12 "ஐயோ, அறிவுரையை நான் வெறுத்தேனே!
கண்டிக்கப்படுவதைப் புறக்கணித்தேனே!
13 கற்பித்தவர்களின் சொல்லைக் கேளாமற் போனேனே!
போதித்தவர்களுக்குச் செவிகொடாமல் இருந்தேனே!
14 இப்பொழுது நான் மீளாத் துயரத்தில் மூழ்கியவனாய்,
மக்கள் மன்றத்தில் மானமிழந்து நிற்கிறேனே" என்று அலறுவாய்.

பிறன்மனைவி நயவாமை[தொகு]


15 உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி;
உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு.
16 உன் ஊற்றுநீர் வெளியே பாயவேண்டுமா?
உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோடவேண்டுமா?
17 அவை உனக்கே உரியவையாயிருக்கட்டும்;
அன்னியரோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளாதே.
18 உன் நீருற்று ஆசி பெறுவதாக!
இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு.
19 அவளே உனக்குரிய அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்;
அவளது மார்பகம் எப்போதும் உனக்கு மகிழ்வூட்டுவதாக!
அவளது அன்பு உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக!
20 மகனே, விலைமகளைப் பார்த்து நீ மயங்குவதேன்?
பரத்தையை நீ அணைத்துக்கொள்வதேன்?
21 மனிதரின் வழிகளுள் ஒன்றும் ஆண்டவர் கண்களுக்குத் தப்புவதில்லை;
அவர்களுடைய பாதைகளையெல்லாம் அவர் சீர்தூக்கிப் பார்க்கின்றார்.
22 பொல்லார் தம் குற்றச் செயல்களில் தாமே சிக்கிக்கொள்வர்;
தம் பாவ வலையில் தாமே அகப்பட்டுக்கொள்வர்.
23 கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் மடிந்து போவர்;
தம் மதிகேட்டின் மிகுதியால் கெட்டழிவர்.


குறிப்பு

[*] 5:7 - "பிள்ளாய்!" என்பது "பிள்ளைகளே!" என்று எபிரேய பாடத்தில் உள்ளது.


அதிகாரம் 6[தொகு]

சில நல்லுரைகள்[தொகு]


1 பிள்ளாய்!
உன் அடுத்திருப்பவரின் கடனுக்காக நீ பொறுப்பேற்றிருந்தால்,
அல்லது அன்னியர் ஒருவருக்காகப் பிணையாய் நின்றால்,
2 அல்லது உன் வார்த்தைகளை முன்னிட்டு
ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டால்,
அல்லது உன் வாய்ச் சொல்லிலேயே நீ பிடிபட நேரிட்டால்,
3 பிள்ளாய்! உன்னை விடுவித்துக் கொள்ள இப்படிச் செய்:
நீ அடுத்திருப்பவரின் கையில் அகப்பட்டுக் கொண்டதால்,
விரைந்தோடிச் சென்று அவரை வருந்தி வேண்டிக்கொள்.
4 அதைச் செய்யும் வரையில் கண்ணயராதே;
கண் இமைகளை மூடவிடாதே.
5 நீ வேடன் கையில் அகப்பட்ட மான் போலிருப்பாய்; [1]
கண்ணியில் சிக்கிய குருவிக்கு ஒப்பாவாய்;
உன்னைத் தப்புவித்துக் கொள்ளப்பார்.

சோம்பேறியாயிராதே[தொகு]


6 சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்;
அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்;
7 அதற்குத் தலைவனுமில்லை, கண்காணியுமில்லை, அதிகாரியுமில்லை.
8 எனினும், அது கோடையில் உணவைச் சேர்த்துவைக்கும்;
அறுவடைக் காலத்தில் தானியத்தைச் சேகரிக்கும்.
9 சோம்பேறிகளே, எவ்வளவு நேரம் படுத்திருப்பீர்கள்?
தூக்கதிலிருந்து எப்போது எழுந்திருப்பீர்கள்?
10 இன்னும் சிறிது நேரம் தூங்குங்கள், இன்னும் சிறிது நேரம் உறங்குங்கள்;
கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திருங்கள்.
11 வறுமை உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப்போல் பாயும்;
ஏழ்மைநிலை உங்களைப் போர்வீரரைப்போல் தாக்கும். [2]

கயவனின் போக்கு[தொகு]


12 போக்கிரி அல்லது கயவன் தாறுமாறாகப் பேசிக்கொண்டு அலைவான்.
13 அவன் கண் சிமிட்டுவான்; காலால் செய்தி தெரிவிப்பான்;
விரலால் சைகை காட்டுவான்.
14 அவன் தன் வஞ்சக உள்ளத்தில் சதித்திட்டம் வகுப்பான்;
எங்கும் சண்டை மூட்டிவிடுவான்.
15 ஆகையால் அவனுக்கு எதிர்பாராத நேரத்தில் கேடு வரும்;
தீடீரென்று அழிந்துபோவான்; மீளமாட்டான்.

கடவுளுக்கு வெறுப்பானவை[தொகு]


16 ஆண்டவர் வெறுப்பவை ஆறு.
ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது.
17 அவை இறுமாப்புள்ள பார்வை,
பொய்யுரைக்கும் நாவு,
குற்றமில்லாரைக் கொல்லும் கை,
18 சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம்,
தீங்கிழைக்க விரைந்தோடும் கால்,
19 பொய்யுரைக்கும் போலிச்சான்று,
நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் என்பவையே.

கற்புநெறி வழுவாமை[தொகு]


20 பிள்ளாய்!
உன் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடி;
தாயின் அறிவுரையைப் புறக்கணியாதே.
21 அவற்றை எப்போதும் உன் இதயத்தில் இருத்திவை;
உன் கழுத்துக்கு மாலையென அணிந்து கொள்.
22 நீ நடந்து செல்லும்போது அவை உனக்கு வழிகாட்டும்;
நீ படுத்திருக்கும்போது அவை உன்னைக் காவல் காக்கும்;
விழித்திருக்கும்போது உன்னுடன் உரையாடும்.
23 கட்டளை என்பது ஒரு விளக்கு;
அறவுரை என்பது ஒளி;
கண்டித்தலும் தண்டித்தலும் நல்வாழ்வுக்கு வழி.
24 அவை உன்னை விலைமகளிடமிருந்து,
தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து விலகியிருக்கச் செய்யும்.
25 உன் உள்ளத்தால் அவளது அழகை இச்சியாதே;
அவள் கண்ணடித்தால் மயங்கிவிடாதே.
26 விலைமகளின் விலை ஒரு வேளைச் சோறுதான்;
ஆனால், பிறன் மனையாளோ உயிரையே வேட்டையாடி விடுவாள்.
27 ஒருவன் தன் மடியில் நெருப்பை வைத்திருந்தால்,
அவனது ஆடை எரிந்துபோகாமலிருக்குமா?
28 ஒருவன் தழல்மீது நடந்து சென்றால்,
அவன் கால் வெந்துபோகாமலிருக்குமா?
29 பிறன்மனை நயப்பவன் செயலும் இத்தகையதே;
அவளைத் தொடும் எவனும் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
30 திருடன் தன் பசியைத் தீர்க்கத் திருடினால்,
அவனை மக்கள் பெருங்குற்றவாளியெனக் கருதாதிருக்கலாம்.
31 ஆனால், அவன் பிடிபடும்போது
ஏழு மடங்காகத் திருப்பிக்கொடுக்க வேண்டும்;
தன் குடும்பச் சொத்து முழுவதையுமே கொடுத்துவிட நேரிடும்.
32 கற்புநெறி தவறுகிறவன் மதிகேடன்.
அவ்வாறு செய்வோன் தன்னையே அழித்துக்கொள்கின்றான்.
33 அவன் நைய நொறுக்கப்படுவான், பழிக்கப்படுவான்;
அவனது இழிவு ஒருபோதும் மறையாது.
34 ஏனெனில், தன் மனைவி தனக்கே உரியவள்
என்னும் உணர்ச்சி ஒரு கணவனிடம் சினவெறியை உண்டாக்கும்;
பழி தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் நாளில்,
அவன் இரக்கம் காட்டமாட்டான்;
35 சரியீடு எதுவும் ஏற்றுக் கொள்ளமாட்டான்;
எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அவன் சினம் தணியாது.


குறிப்புகள்

[1] 6:5 - "வேடன் கையில்" என்பது "கையில்" என்று எபிரேய பாடத்தில் உள்ளது.
[2] 6:10-11 = நீமொ 24:33-34.


(தொடர்ச்சி):நீதிமொழிகள்:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை