பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48சீவக சிந்தாமணி



தத்தைக்கு இந்த வித்தை எல்லாம் விளங்கவில்லை; புதிதாக வந்தால் இராசமாபுரத்தில் இப்படி வரவேற்பார்கள் என்று நினைத்தாள்.

“வீட்டுக்கு வரும் மருமகளை வரவேற்பது போல் வரவேற்கிறாயே” என்று கேட்டான் சீதத்தன்.

“மணமக்களை வரவேற்கிறேன்; எனக்குத் துணை இல்லை என்று புதிதாக அழைத்து வந்திருக்கிறீர்கள். அதனால் வரவேற்கிறேன்; வயதில் குறைந்தவள்; வாலிப மங்கை, அவள் இனி எனக்குத் தங்கை” என்றாள்.

“தன் கையைக் கொண்டு தன் கண்ணைத் தானே குத்திக் கொண்டால் யாரும் தடுக்க முடியாது.”

“இவள் காந்தருவ நாட்டு மங்கை என் கை வெறுங்கை, நீ ஏறி இருப்பது முருங்கை, இவள் நம்மகள்”.

“மகளா? புது உறவாக இருக்கிறது”.

“பெண்ணொருத்தி பிறக்க வேண்டுமென்று நீ எண்ணி வந்தாயே! இனிமேல் பிறந்து இனிமேல் வளர்ந்து இனிமேல் எப்படி என்ன செய்ய முடியும்? கடையில் இவள் கிடைத்தாள்” என்றாள்.

“என்ன விளையாடுகிறீர் கடையில் வாங்கும் சரக்கா இவள், இவள் மிடுக்காக இருக்கிறாள்; எனக்குக் கடுக்காய் கொடுக்கிறீர்” என்று வெடுக்கெனப் பேசினாள்.

“கலுழவேகனின் மகள்; இவள் பெயர் காந்தருவ தத்தை அவளுக்கு மணமகன் ஒருவனைத் தேடி அவனை மாப்பிள்ளையாக்க வேண்டும், அதற்காகத் தான் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.”

“இவளுக்கு இடையே இல்லையே”

“நடை இருக்கிறது; அதனால் அவளுக்கு இடை இருக்கத்தான் வேண்டும்; படைப்பு அப்படி”