பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்மகள் இலம்பகம்177



சீவகன்தான் தன் மகன் என்பதை அறிவித்தாள்.

கட்டியங்காரன் தன் முன் சச்சந்தன் இருப்பதை அறிந்தான். தன் சரித்திரத்தை முடிக்க அவன் கையில் எழுத்தாணி இருப்பதைக் கண்டான்.

செய்ந்நன்றி மறந்த தனக்கு உய்தி இல்லை என்பதை அறிந்தான்.

கொடுங்கோலன் வீழ்ந்தான் என்ற ஆரவாரம் எங்கும் எழுந்தது. அவன் வஞ்சகம் நெஞ்சில் மறைந்திருந்தது; அதைத் தேடிச் சீவகனில் கை வேல் பாய்ந்து அவனைத் துளைத்தது.

மண்ணுக்கு வேந்தனாகச் சீவகன் முடிசூட்டப் பெற்றான். வாசகர்களுக்கு ஏன் கோவிந்தன் அவ்வாறு நடந்து கொண்டான் என்பது எப்படி விளங்க வில்லையோ அதே நிலைதான் சீவகன் அடைந்தான்.

அந்தக் கூட்டத்தில் கலுழவேகனின் ஆட்களும், உலோக பாலனின் ஆட்களும் எப்படி ஏன் திரண்டு இருந்தனர் என்பது விளங்காமலேயே இருந்தது. எப்படி அவர்கள் திடீர் என்று படை வீரர்களாக மாறினர் என்பதும் விளங்காமல் இருந்தது.

கட்டியங்காரன் எழுதிய கடிதத்தைக் கோவிந்தன் நம்பி விட்டானா! அல்லது அவன் பேசியது வெறும் நாடக உரையா என்பதும் விளங்காமல் இருந்தது.

“ஏன் தன்னிடம் அவன் மனத்தில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி இருக்கக்கூடாது?” திட்டமிட்டுக் கட்டியங்காரனை வலையில் சிக்க வைத்துக் கொலை செய்தது போலத் தோன்றியது. இருந்தாலும் மாமன் செயல்கள் அத்தனையும் நன்மையில் முடிந்தன என்பதால் அவன் மீது கொண்ட சினம் தணிந்தவனாய்க் காணப்பட்டான்.