பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152சீவக சிந்தாமணி



வீட்டுப் பெண்கள் பூண்களைத் தலையிலிருந்து கால் வரை மாட்டி வைக்க அவள் சுமக்கவேண்டியது ஆயிற்று.

பந்தாடிக் கொண்டிருந்த நிலையில் எல்லாம் இறுக்கக் கட்டப்பட்டுக் கோயில் தூணின் சிற்பம்போல் காட்சி தந்தாள். இப்பொழுது அம்மன் சந்நிதி தரிசனம் அவனுக்குக் கிடைத்தது. நெற்றியில் குங்குமம் அதற்குக் காரணம் ஆகியது.

வழக்கமான அறிமுகங்கள் நடந்தன; அது முன் நிகழ்ச்சியில் சிறிது மாறுபட்டு இருந்தது, “இவள் ஒரே மகள்; கொஞ்சம் விளையாட்டுப் புத்தி; பெரியவர்களைத் தாக்கிப் பேசுவாள், மேலாக்குப் போடுவது மூக்குத்தி இந்தமாதிரி இவளுக்குப் பிடிக்காது. வரைச் சித்திரம் போல் காட்சி அளிப்பாள்; கோடுகள் தெரிய வேண்டும் என்பதில் இவளுக்கு ஒரு ஆசை” இவை எல்லாம் அப்பா சொன்னவை அல்ல; அம்மாவின் திருவாயால் மலர்ந்தவை.

“சில விஷயங்களில் முனைப்பு” என்றாள். அது அவனுக்கு மட்டும் விளங்கியது.

அவள் விருப்பம்போல் ஆடைகள் குறைத்துக் கொள்ள அவன் அனுமதி வழங்கினான்.

அவன் அவளைப் பாராட்டினான். “நீயும் தவறு இல்லை; நின்னைப் பந்தாட விட்ட எவரும் தவறிலர் நீ வருவது முன் அறிவிப்புச் செய்யாத அரசனே தவறு உடையவன்” என்று அவள் முனைப்பைச் சுட்டிக் காட்டினான்.

“தெரிந்திருந்தால் என்ன செய்வீர்,” என்றாள்.

“அந்தப் பக்கம் தலைவைத்துப் படுத்திருக்க மாட்டேன்.”

“இப்பொழுது எந்தப் பக்கமும் தலைவைத்துப் படுக்கலாம்” என்றாள்.