பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

தமிழ் இலக்கியக் கதைகள்

அவருடைய சர்வ நாடிகளையும் ஒடுக்கிவிட்டது. பேசாமல் அவனைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிந்து கொண்டபின் அதையே செய்தார். அவன் அழைத்துச் சென்ற அந்தப் பெரிய மாளிகையைக் கண்டதும் அதற்குரியவன் அந்நகருக்கே அரசனைப் போன்ற தகுதியும் பெருமையும் உடையவனாக இருக்கவேண்டும் என்று ஊகித்துக் கொண்டார் புலவர். தோட்டக் காவற்காரன் மாளிகை வாசலில் நின்ற காவலனை ஏதோ குறிப்பாகக் கைகாட்டிக் கேட்டான்.

“இப்போது முடியாது.பார்க்க வேண்டுமானால் எப்படியும் இன்னும் ஒன்றரை நாழிகை காத்திருக்கவேண்டும்” என்று மாளிகைவாயிலில் காவற்காரன் தோட்டக்காரனு க்கு மறுமொழி கூறினான்.

இந்த மறுமொழியைக் கேள்வியுற்ற பின்னர் சிறிது நேரம் ஏதோ சிந்தித்துக் கொண்டிருப்பவன் போல நின்று கொண்டிருந்தான் தோட்டக்கர்ரன். பின் ஏதோ முடிவுக்கு வந்தவன் போல் வாயிற் காவலனுடன் கால் நாழிகை காதோடு காதாக ஏதோ பேசினான். இறுதியில் வாயிற் காவலன் தலையசைத்தான். தோட்டக்காரன் முகம் மலர்ந்தது. இருவரும் புலவரை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றார்கள். வாயிற் காவலன் ஒர் அறையின் கதவைத் திறந்துவிட்டான். -

இதன் விளைவு? படிக்காசர் இரண்டு நாழிகை நேரம் அந்த அறையில் சிறை செய்யப்பட்டார். தம்மை உள்ளே விட்டுத் தாழிட்டுக்கொண்டு சென்றபோது அவர்கள் பேசிச் சென்ற பேச்சிலிருந்து இதை அவர் அனுமானித்துக் கொண்டார்.

இங்கே இவர் இப்படி இருக்கும்போது, அங்கே ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டுத் தோட்டத்திற்குள் நுழைந்த படிக்காசரின் நண்பர், மரத்தடியிற் படிக்காசரைக் காணாமல் திடுக்கிட்டார். சற்று நேரம் அந்தப் பக்கம் படிக்காசர் எங்கே போயிருக்கலாம்? என்ற சிந்தனையோடு உலாவிக் கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக அங்கே வந்த வேளாளன்