பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

83

வாங்கியுண்ண வழிகாத்தான் வயிற்றுச் சாமி
வாணருக்கு இங்கு தவுவாரார் மற்றோர் சாமி
ஓங்கியசீர் மயிலையிற்பொன்னப்ப சாமி
உதவிய வேங்கடசாமியுசித வேளே!"

முக்கண்சாமி - சிவபெருமான், முகுந்தசாமி = திருமால், கமலப்பொகுட்டு = தாமரை மலரின் நடு. தலைநாற்சாமி = பிரமன், தடவரை = பெரியமலை, தகப்பன் சாமி = முருகன், வயிற்றுச்சாமி = பிள்ளையார், வாணருக்கு - தமிழ் கற்றவர்களுக்கு.

சந்தர்ப்ப சாமர்த்தியமும் சிந்தனையும் ஒரு சேர விளைந்த இப்பாடல்தான் அந்த அழகிய கவிதை முத்து.

32. பட்டால்தான் தெரியும்

திருமணமான புதிதில் உடனடியாக மனைவியைக் கூட்டிக்கொண்டு போய்க் குடித்தனம் வைத்துக்கொள்ள முடியாத தொலை தூரத்து ஊருக்கு வேலை மாறுதல் கிடைத்து விடுகிறது சில இளைஞர்களுக்கு.வேறு வழியில்லாமல் கலியானமாகியும் பிரம்மச்சாரி என்ற நிலையில் தனிக்கட்டையாகப் பல நூறு மைல்களைக் கடந்துபோய் வாய்க்கு விளங்காத சாப்பாட்டோடு ஏங்கி ஏங்கி வாழ வேண்டியிருக்கிறது அவர்களுக்கு. உத்தியோக யுகமாகிய இந்த நூற்றாண்டில் வடக்கே வெகு தூரத்திலுள்ள நகரங்களில் உத்தியோகம் பார்க்கும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இந்த அனுபவம் ஏற்படுவது இயற்கை.ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து குடியிருக்க வீடு கிடைக்கிறவரை தங்கள் மனைவிக்கு அவர்கள் எழுதும் கடிதங்களே அவர்களுடைய மனவேதனைக்குச் சான்று பகரும். வாழ்வதிலும் பணம் சேர்க்கும் இலட்சியத்திலும் வேகம் அதிகரித்துள்ள இந்த நூற்றாண்டுக்கு இது இயல்பாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருக்கலாம்.