பக்கம்:அவள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



xxvii

 

அதே சமயம் ஒரு அமைதி, ஆசிபோல் எங்கள்மேல் இறங்கியது. ஒரு 'வெறிச்'. இது நம்பிக்கை இழந்த சூன்ய 'வெறிச்' அன்று. தன்னுள் யாவற்றையும் அடக்கி நிறைந்து, கவித்வமான விசனத்துடன் தன்னிகரற்ற தனிமை கொண்ட அரூபத்தின் 'வெறிச்'. இதுவேதான் தருண நிலையோ? அவள் இப்படியும் தன்னைக் காண்பித்துக்கொள்வாளோ? கொள்கிறாளா?

மேலோட்டத்திலேயே தெரிந்தது. பாதிமா, ஆய்வுக் கட்டுரையில் (தான் அறிந்தோ அறியாமலோ லா.ச.ரா, எனும் மனிதனுக்கு லா.ச.ரா.வின் அரூபத்தைச் சாறாய்ப் பிழிந்து எடுத்து அதன் எடையைக் காண்பித்திருந்தாள். என் அரூபம் எனும் என் விசுவரூபத்தை என் உள்ளுணர்வுக்கு முன் நிறுத்தியிருந்தாள். அவரவர்க்கு அவரவர் தருணத்தில் அவரவர் அரூபம் தன்னை அடையாளம் காட்டும் அதுதான் அவள்.

பாதிமாவும் அவள் கணவரும் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். ஆனால் அவள் சொன்னது மேலும் சிந்தனையைத் துரண்டிற்று.

பாதிமா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவள். அந்த மதக் கோட்பாடின்படி Judgment Day என்று ஒரு நாள் உண்டு. கர்த்தரின் தீர்ப்புகள். கேப்ரியல் எனும் தேவதூதனின் எக்காளத்தின் ஊதலில், இறந்தவர் அனைவர் உயிர்பெற்று அவரவர் கல்லறையினின்று எழுந்து கடவுள் முன் நிற்பர்.

'உனக்கு வாழ உயிர் கொடுத்து உலகுக்கு அனுப்பினேனே, அங்கு உன் உயிரோடு என் செய்தாய்?" என்று ஸ்ர்வ பிதா ஒவ்வொருத்தராய்க் கேட்பார். அவரவரின் பதிலுக்கேற்ப (அவரிடம் எதையும் மறைக்க முடியாது) தீர்ப்பும் தண்டனையும் வழங்கப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/27&oldid=1496090" இலிருந்து மீள்விக்கப்பட்டது