பக்கம்:அவள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxxxi


தாய், மனைவி, உடன்பிறந்தாள், காதலி, நண்பி, வேசி, குழந்தை, பாப்பா, பாட்டி, வைப்பாட்டி, இன்னும் பல உறவுகளூடேயும், மூர்க்கம், குரூரம், கோபம், கருணை, பேதைமை, வெகுளித்தனம் இன்னமும் ஏதேதோ குணங்களுடேயும் அவர்களின் தாய்மை சரடு ஒடுகின்றது.

சொல்லிய உறவுகளையும் தாண்டி, அவைகளிலேயே, எதிர்பாராத சமயங்களில் இடங்களில், சூட்சும நிலைகள் தோன்றிக் களவு காட்டுகின்றன.

ஒரு புருவ உயர்த்தல்
தனி ஒளி வீசின விழிகளின் மேல்
சட்டெனச் சாளரம் விமுந்த இமைகள்
உதட்டோரத்தில் ஒரு குழிவு
நமக்குக் காரணம் தெரியாது
ஆனால் மயக்கம் காட்டும்
விரல் நுனி முத்திரை
திடீர்ப் பல் லொளியில் விண் ஒளி.

சொல்லிக்கொண்டே போகலாம். பேச்சைக் காட்டிலும் கலம் பேசும் பாஷைகள்; அவை பிடிபடாதவை. ஆனால் ராகத்துக்கு அது ஸ்வரங்கள் போல, இன்றியமையாதவை.

ஆண் எப்பவுமே சுபாவத்தில் பெருந்தன்மையான பிராணி. A noble animal லக்ஷியவாதி. அதனாலேயே அசடு. ஆனால் ஸ்திரீ யதார்த்தவாதி, மண்டை ஆகாயத்தில் ஆயிரம் கிறங்கினாலும், அவள் பாதங்கள் பூமியில் ஊன்றியே இருக்கும். அந்தந்த நிலைக்கு உடனே தன்னைச் சரிப்படுத்திக்கொண்டு விடுவாள். சப்பாத்தியில் எந்தப் பக்கம் வெண்ணெய் தடவியிருக்கிறது என்று அவளுக்குத் தெரியும். கடைசியில் வெற்றி அவளுடையதே.

எல்லாம் தெரிந்தும் ஒன்றுமே அறியாத அப்பாவித் தனமும் அவளிடம்தான் பாசாங்கிலாமல் இருக்கமுடியும். இதுவேதான் அவளுடைய Mystic qualityயோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/41&oldid=1496147" இலிருந்து மீள்விக்கப்பட்டது