குண்டலி
”ஒரே ஒரு ஊரில்-"
என் மனைவி கைப்பிள்ளைக்குக் கதை சொல்ல ஆரம்பிக்கிறாள். அவனைப் பால் மறக்கடிக்க என்னென்ன வித்தைகளோ பத்து நாட்களாக நடக்கின்றன.
"ஏன் மன்னி?" என் தம்பி குறுக்கு வெட்டினான்; விடுமுறைக்கு வந்திருக்கிறான். “ஒரே ஒரு ஊர்தான் உண்டோ? உலகத்தில் எத்தனை ஊர்கள் தெரியுமா?’’
"எத்தனை இருந்தால் என்ன? எல்லாம் ஒரே உலகத்தைச் சேர்ந்தவைதானே! உலகங்கள் எத்தனை தெரியுமா?”
“எத்தனை?" என் தம்பி சற்று மிரண்டு போனான். அவன் பாடங்கள் இன்னும் அவ்வளவு தூரத்துக்கு வர வில்லை.
“எத்தனை எத்தனையோ?" அவள் குரல் மூச்சாய் ஒடுங்கிற்று. "ஆனால் கதை என்னவோ ஒன்றுதான்.”
"இல்லை; எத்தனை எத்தனையோ கதைகள்-’’
"இல்லவே இல்லை-" அச்சீறல் கேட்டுத் தலை நிமிர்ந்தேன். ‘ "அத்தனையும் ஒரே கதையின் அத்தனை துவக்கங்கள் தாம்."
"துவக்கங்களும் எத்தனையோ. முடிவுகளும் எத்தனை எத்தனையோ-’’
”ஸேது, கதையைக் கெடுக்காதே."