குண்டலி O 43
ஸ்டேஷனின் பேர்ப்பலகை நட்டு நிற்குமிடத்திலிட்ட பெஞ்சின்மேல் ஒரு உருவம் தெரிந்தது. யாராவது இறங்கினார்களா? டிக்கட் இல்லாமல் டிமிக்கி கொடுக்கக் காத்திருக்கிறானா?
இரண்டடி எடுத்து வைத்ததும் என் மனைவியென்று கண்டேன். அவளை விளிக்க உயர்ந்த கையை ஒடுக்கிக் கொண்டேன்.
'கார்டு'டன் சச்சரவில் நான் மானமிழந்து நிற்பதைக் கண்டுகொள்ளாது அங்கேயே நாசூக்காக நின்றுவிட்டாளோ? வந்த சிரிப்பையடக்கிக் கொண்டேன். ஏனெனில் எங்களிடையில் ஒருவருக்கொருவர் மனம் நளினம் கண்ட நாட்கள் கடந்தாகிவிட்டன. அவரவர் மனத்தில் அவரவர் புழுங்கும் நிலையில் இப்போதிருந்தோம். தன் யோசனைகளில் ஈடுபடத் தனிமைக்கு வந்திருக்கிறாள். பாவம்; அவளை ஏன் கலைக்கவேண்டும்?
இந்தண்டை வேப்பமரத்தடிப் பெஞ்சில் உட்கார்ந்தேன்.
நான் இங்கே-அவள் அங்கே. கணவன் மனைவியே ஆயினும் நாங்கள் வாழ்வின் வழிப்போக்கர்கள். அவரவர் விதியின் புனைதல் அவரவரதே எனும் முறையில் நாங்கள் இருவரும் முற்றிலும் அந்நியரே என்பதற்கு இதைவிட ருஜூ எது? என் விதியுடன் அவள் விதி பிணைக்கப்பட்டிருப்பது அவள் விதிவந்த வழி. ஒற்றுமையாமோ?
பயல் தூங்கியிருப்பான். அதான் கொஞ்சம் ஒய்வாயிருக்கிறாள்.
மூன்று, எவர் ஐதீகத்திலேயும் ஒரு ஆரம்பத்தையோ முடிவையோ நிறுவும் முக்யமான எண் எனக் கருதுகிறேன்.
“One-Two—Three—Off”
“ஒரு தரம் ரெண்டுதரம் மூணு தரம்-விட்டுட்டேன்!”
“ஜலமும் மூணு பார்க்கும்!'"