பக்கம்:அலைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 O லா. ச. ராமாமிருதம்

 வரவேற்றன. அந்தப் பிரும்மாண்டமான பழத்தின் கொட்டையின் முகடுபோல், அவை நடுவே மலை நின்றது. அதன் அடிவாரத்திலும் உடலிலும் பாறைகள் முண்டு முடிச்சுமாய், அசிங்கமாய், ஆத்திரத்துடன் எழுந்தன. ஆனால், மலை உயர உயர, அது இட்டுக்கொண்ட சிகரம், கீழ்கிடப்பனவற்றின் பெளருஷத்தைத் தூண்டிப் பழித்தது. அந்த இடத்தில் மாத்திரம் வானம் பொத்துக்கொண்டு மலையுச்சியில் நீலம் பெய்தது.

காளை முகந்தூக்கி மலைமேல் நீலத்தைத் தரிசித்ததும், அதன் கழுத்து மடிகளுக்கிடையில் நெஞ்சு நெகிழ்ந்து தவித்தது. மலையை வணங்குவதுபோல் தலை குனிந்து மூச்சுப் பிடித்து, காளை மலைமேல் ஏற ஆரம்பித்தது. தன் பலத்திற்கு ஈடான சோதனையில் அது ஒரு தனிப் பரவசத்தில் ஆழ்ந்தது. இதுவரை பழக்கமிலாத இடங்களையும் உயிர்களையும் சப்தங்களையும் காண்கையில், கேட்கையில் அதன் வியப்பு எடுத்து வைத்த அடிக்கு அடி மிகையாயிற்று.

ஒரு இடத்தில் ஒரு பாறையின் சந்தில் ஒரு கொடி சுருண்டு கிடந்தது. அதைக் கடிக்கக் காளை கழுத்தை நீட்டியதும், அக்கொடி திடீரென சுருள் சுழன்று சரசரவென வளைந்து வளைந்து ஒடிப் பாறையின் மறுபுறத்தில் ஒளிந்து கொண்டது. அந்தண்டையிலிருந்து "புஸ்புஸ்” என சீறல். காளை திகைத்தது. அது தலை நிமிர்ந்து குன்றிடுக்கில் முளைத்திருந்த ஒரு இலைக் கொத்தை வாயில் பற்றி இழுத்தது. அந்தச் செய்கையில் அதன் கண்களுக்கே மலையின் மறுபக்கத்துப் பிரதேசம் திடீரெனக் குதித்தெழுந்தது. காளை, பறித்த இலையைக் கடிக்க மறந்தது. ஒன்றும் பாதியுமாய் இலைக் கொத்து அதன் வாயிலிருந்து தொங்கிற்று,

மலைச் சிகரத்துக்கும் அதற்கும் இன்னும் கொஞ்ச உயரமே தான் பாக்கி. படிபோல் உயர்ந்து இடங்கொடுத்த ஒரு கல் முடிச்சின் மேல் காளை காலை வைத்தபடி, ஒரு குறுகிய பாறை மீது பின்னங்கால்களை ஊன்றிக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/66&oldid=1287255" இலிருந்து மீள்விக்கப்பட்டது