பக்கம்:அலைகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோம சன்மா


சோம சன்மா என்னும் 'பிரம்மன்' பாறைமீது கால்களை அழுந்த ஊன்றிக் கொண்டு, இளந்தாடி காற்றில் அலைய, கீழே பசிய மரஞ்செடிகள் அடர்ந்திருக்கும் பிரதேசத்தைக் கண்டு அதிசயித்து நின்றான்.

குருகுல வாசத்திலில்லாது, நேரே யோக சித்தியினின்று விழித்தெழுந்த பால சன்யாசியாதலின், அவன் மண்டையிலும் முகத்திலும் உடலிலும் மயிர் வெட்டாது அடர்ந்து வளர்ந்திருந்தது. மண்டையில் ஊறியிருக்கும் ஞான வெறியோ என்னவோ! சற்று மஞ்சள் பூத்த கண்கள், வீஷண்யமாய்ப் பிரகாசித்தன. சமாதியினின்று திடுக்கென்று விழித்தெழுந்ததாலோ என்னனோ, சதா அழிந்து கொண்டும் மறுபடி மலர்ந்து கொண்டுமிருக்கும் இந்தப் பூவுலகின் அழகு, அவனை அப்போதுதான் வயிற்றிலிருந்து விழுந்த குழந்தை போல் பிரமிக்க அடித்தது.

பூமாதேவி, இளவேனிலில் குளித்து, குளித்த சுறுக்கில் பச்சைப் பட்டாடையை உடல்மேல் போர்த்திக் கொண்டிருந்தாள். அவளுடைய அவயவங்களின் வளத்தை எடுத்துக்காட்டி, மரமும் செடியும் கொடியும் பூவும் புதரும் அங்கங்கே பொங்கிப் புளகித்துப் பூத்திருந்தன. வெள்ளிச் சரிகை போல் ஒர் அருவி, பாறைகளினின்று சரிந்து, காட்டினுள் ஊடுருவிச் சென்றது. ஜலத்தடியில் வெள்ளைக் கூழாங் கற்களும் மணலும் பூமாதேவியின் அடிவயிறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/195&oldid=1284923" இலிருந்து மீள்விக்கப்பட்டது