பக்கம்:அலைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டாளு O 105


ஒருத்தி யிருப்பதே சுசிக்குப் பஞ்சாமியுடன் தர்க்கிக்கவோ, தன் ஆக்ரமிப்பை அவன் எவ்வளவுதூரம் பொறுப்பான் என்று ஆழம் பார்க்கவோ தைரியமாயிருந்தது.

ஆனால், அவர்கள் இருவரையுமே கண்டு ஆண்டாளு, தன்னுள் ரகஸ்யமாய்ச் சிரித்துக் கொண்டிருந்தாளோ எனப் பஞ்சாமிக்குத் தோன்றியது. அவ்வெண்ணமே இம்சையாயும் ரோஸமாயும் இருந்தது. எந்த சமயத்தில், எதற்காக, அவர்களுடைய எந்த அசட்டுத்தனத்துக்காக கேலி நகைப்பில் உள்குலுங்குகிறாள் என்று குறிப்பாய் சுட்டிக் கண்டு கொள்ளமுடியாதது இன்னொரு பெரிய சீண்டல். ஏனெனில் ஆண்டாளு எப்பவும் இன்முகமாகவேயிருந்தாள்.

சுசிக்கு எடுத்ததுக்கெல்லாம் மூக்கு துடிக்கும். போதும் போதாதற்கு இப்போ கர்ப்பிணி, துர்க்குணி, அத்தனைக்கத்தனை ஆண்டாளு பற்பொடி விளம்பரம்போல் இளித்துக் கொண்டேயிருப்பாள். கன்னம் குழிந்தது. எப்படி அவளுக்குப் பற்கள் அவ்வளவு வெண்மையாய், வரிசையாயிருக்கின்றன? நிஜமாய்த்தான், எதைப் போட்டுப் பல் விளக்குகிறாள்?

சுசிக்கு வரவர தள்ளவில்லை. மேல் மூச்சு வாங்கிற்று. ‘அம்மா எப்போ வந்து அழைத்துப் போவாள்? அதுக்குள்ளேயே, ஆண்டாளு, நீ இல்லாட்டா என்னடி பண்ணுவேன்? அவர் இருக்கிற ஊழலுக்கு வீடு நாறிப் போயிடுமே!"

“நீ ஏம்மா கவலைப்படறே? நான்தான் உன் வூட்டு மனுசி ஆயிட்டேனே!”

சுசிக்கு உச்சி குளிர்ந்து போகும். பஞ்சாமிக்குத் தெரிந்தும், தெரியாமலும் ஆண்டாளுக்குச் செளகரியங்கள் நடக்கும். தனக்கு அவன் மாலை வாங்கி வரும் கதம்பத்தில் சரி பாதி ஆண்டாளுடன் பகிர்ந்து கொள்வாள். அவளைவிட 'ஸ்டைலா'க, ஆண்டாளு அதைக் கொண்டையில் வட்டமாகச் சுற்றிக்கொள்வாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/107&oldid=1288262" இலிருந்து மீள்விக்கப்பட்டது