பக்கம்:அலைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டாளு O 103

கலியாணப் பரிசு, ஆள் உயரத்துக்கு. ஒரு பக்கத்துக் கதவு முழுக்க நிலைக்கண்ணாடி பதித்தது. அந்தப் பீரோவிடம் போய் அதைத் திறந்து மூடித் திரும்பிவந்தாள்.

“என்னதும்மா, துட்டா? துட்டு யாருக்குமா வேணும், என்மாதிரி நீ ஒரு பொம்புள்ளே, படுத்திருந்ததப் பார்த்தேன் மனந்தாளல்லே. அவ்வளவுதானே! உன்னைப் பெத்தவங்க இங்கே யிருந்தா உன்னை இப்படிக் காணப் பொறுப்பாங்களா?"

சுசி, அந்த நிமிஷமே உடைந்து உருகிப்போனாள். எட்டுப் பெண்களைப் பெற்ற அவள் தாயாருக்கு உண்மையிலேயே அவள்மேல் அவ்வளவு தனி ஆதரவு இருக்குமோ? ஆனால், வந்தவள் சொன்ன விதத்தில் அவளுக்கு அவள் தாயார்மேல் அன்பு திடீரென ஆடிப் பெருக்கெடுத்தது.

"எனக்கு ஏதாச்சியும் குடுக்கணும்னு இருந்திச்சா, ஒரு டம்ளர் காப்பி ஸ்டாங்கா, நீங்க குடிக்கற மாதிரி-ரெண்டாந்தண்ணி, மூணாந்தண்ணியில்லே-நிறைய பாலுவிட்டு, அள்ளி சக்கரைப்போட்டு சேறாட்டம் கொடு. எனக்குப் பாப்பார் வீட்டுப் பண்டம்னா அவ்வளவு ஆசை. விட்டுச் சொல்றேனே, உன்னைப் பார்த்தவுடனே எனக்கென்னவோ அப்படி புடிச்சுப் போச்சும்மா, மெய்னா வெச்சுக்க, பொய்னா வெச்சுக்க. என்ன வேலைக்கு வெச்சுக்கறியாம்மா? நீ இஷ்டப் பட்டது கொடும்மா. துட்டு யாருக்கம்மா வேணும்? எப்ப வேணும்னாலும் சம்பாரிச்சுக்கலாம். இந்தா கருவேப்பிலை எடுத்துக்க, துவையல் அரைச்சு எனக்கு ஒரு உண்டை கொடு-"

கூடையைக் கவிழ்த்து ரேழி வாசற்படியைத் தாண்டுமிடத்தில் தாழ்வாரத்துச் சுவரில் ஏற்கெனவே அதற்கென்றே அடித்தாற்போலிருந்த ஆணியில் மாட்டினவள் தான்.

அன்று மாலை பஞ்சாமி ஆபீஸிலிருந்து வந்து விவரம் கேட்டதும் வழக்கப் பிரகாரம் ஆரம்பித்துவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/105&oldid=1288260" இலிருந்து மீள்விக்கப்பட்டது