194 லா. ச. ராமாமிருதம்
“—ம்—ம்?”
“உனக்கு என்னைப் பிடிக்கிறதோ?”
இருளில் அவள் புன்னகை புரிகிறாள். என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் எனக்குத் தெரியும்
“ஏன் அப்படிக் கேட்கிறாய்?”
“எனக்குத் தெரியனும்.”
“பிடிக்காமல் என்ன?”
“உண்டோ என்றால் இல்லாமல் என்ன என்பது பதில் அல்ல.”
“பின் என்னவாம் பதில்?”
“ஒன்று உண்டு அல்லது இல்லை என்பதுதான் பதில்?”
“.........”
“என்ன சும்மாயிருக்கிறாய்?”
“பிடிக்கிறது—” என்று இழுத்தாள்.
“இல்லை.”
“இருக்கிறது என்றால் இல்லை என்கிறாய்,நான் என்ன சொல்ல?” அவள் திகைப்பு பரிதாபமாயிருந்தது.
“பிடிக்கிறது என்றால் போதாது”— என் நெஞ்சில் கிலேசம் புகுந்தது.
“நீ அதானே கேட்டாய்?”
“ஆமாம். ஆனால் பிடிக்கிறது என்கிறதே போதாத வார்த்தை. நான் வேண்டுவதைத் தெரிவிக்க வேகம் போதாத வார்த்தை. பிச்சைக்கார வார்த்தை. புஷ்டியில்லாத தரித்திர வார்த்தை அந்த வார்த்தைமேல் எனக்குக் கோபம் முறுக்கேறிக்கொண்டே போயிற்று.