பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174சீவக சிந்தாமணி



இலக்கணைக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஆற்றங் கரையில் நீர் அலை தான் கட்டி வைத்த கோட்டையைக் கலைத்து இழுத்துச் சென்றது மறுபடியும் நினைவுக்கு வந்தது, அந்த நீர் அலை இன்று தந்தையின் சொல் அலை.

விசயை குறுக்கிடவில்லை; அது பெற்றவன் உரிமை என்று மதிப்புத் தந்தாள்.

அவள் தாய் கொதித்தாள்; பானையில் இருந்த தட்டை மாமன் அகற்றினான்; கொதி அடங்கியது.

“என் தங்கையை உறவு கருதி உன் தந்தைக்குக் கொடுத்தோம்; அதே தவறு மறுபடியும் செய்ய விரும்பவில்லை. என் மகள் வீரன் ஒருவனுக்கே உரியவள்; திரிபன்றி ஒன்று இலக்காக வைப்பேன்; நீ விசயனாக விளங்க வேண்டும்”

சீவகனுக்கு அது பெருமையாக இருந்தது.

“தத்தையை எப்படி மணந்தாய்?” என்றான் மாமன்.

“வீணையில் வென்று”

“குணமாலையை?”

“யானையை அடக்கி”

“இவற்றைத்தான் நாட்டிலே இப்பொழுது கதையாகப் பேசுகிறார்கள்; நீ பந்தாடியவளையும், தோட்டத்தில் சந்தித்தவளையும், காதல் கொண்டவளையும் மணந்தது சரித்திரம் அல்ல; அவை உன் தனிப்பட்ட சாதனை, பெருமை சேர்ப்பவை அல்ல” என்றான்.

அவளைக் குதிரைமீது வைத்து இழுத்துச் சென்று சமியுக்தையாக ஆக்க நினைத்தான். இது அவன் முயற்சியைக் கைவிடும்படி செய்தது. மாபெரும் கவிஞனைப் பார்த்து நீ ஒரு வீரகாவியம் பாடு என்றால் அவன் எப்படி மகிழ்வு கொள்வானோ அத்தகைய மகிழ்ச்சி கொண்டான்.