பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அன்பு அலறுகிறது

அவள் இறந்தபோது அவர்மேல் அவள் கொண்டிருந்த அன்பும் இறந்திருக்கலாம்; அவர் இறக்காத போது அவள் மேல் அவர் கொண்டிருந்த அன்பு எப்படி இறந்தது. அவளிடம் செலுத்திவந்த அன்பை அவரால் எப்படி என்னிடம் செலுத்த முடிந்தது என்று எனக்குப் புரியவில்லை! புரியாவிட்டால் என்ன, அதற்காக ஆண் குலத்தைப் போலவே பெண் குலமும் அன்பை - அதன் மூலம் தன் ஆன்மாவைக் கொன்றுவிட வேண்டுமா என்ன?

என்னைப் பொறுத்தவரை என் மனப்பூர்வமாகவே நான் அவருடைய கையைப் பற்றினேன்; அதே மாதிரி அவரும் தம்முடைய மனப் பூர்வமாகத்தான் என்னுடைய கையைப் பற்றியிருப்பார் என்று நான் அன்றும் நம்பினேன்; இன்றும் நம்புகிறேன்!

பார்க்கப்போனால் எங்களுக்குள்ளே இருந்த வித்தியாசமெல்லாம் வயது வித்தியாசந்தான். மற்றபடி, வேறு வித்தியாசம் எதுவும் எங்களுக்கிடையே இல்லை.

இதற்காக உற்றாரும் உலகத்தாரும் என்மேல் ஏன் அனுதாபம் கொள்ள வேண்டும்? எனக்கு நானேதான் ஏன் அனுதாபம் தெரிவித்துக்கொள்ள வேண்டும்?

இந்த ஒரே காரணத்துக்காக நான் அவருடைய மகளாகிவிட முடியுமா? அவர்தான் என்னுடைய தந்தையாகிவிட முடியுமா?

அதிலும், யாராவது ஒரு வயோதிகரை இரண்டாந்தாரமாகவோ, மூன்றாந்தாரமாகவோ கல்யாணம் செய்து கொள்ளும் பெண்ணிடம் நான் எப்பொழுதுமே